வேலை முடிஞ்சதும்.. ஜெயலட்சுமியிடம் பறந்து விடுவார் "புறா" கார்த்திக்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்!
நகை திருடி வந்த புறா கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளான்
சென்னை: காரியம் கச்சிதமாக முடிந்ததும் முதல்வேலையாக ஜெயலட்சுமியிடம் சென்றுவிடுவார் "புறா கார்த்திக்"... ஆனால் இவரை பிடிக்க நம் போலீசார் பட்ட பாடு இருக்கிறதே.. அதை மனசார பாராட்டிதான் ஆக வேண்டும். மொத்தம் 175 கேமிராக்கள்.. 15 நாட்கள் பாடுபட்டுதான் இந்த "புறா" அகப்பட்டு கொண்டுள்ளது!
சேலம் கருவூலத்தில் கணக்காளராக வேலை பார்ப்பவர் சத்தியவாணி.. 57 வயதாகிறது.. சென்னை அனகாபுத்தூர் பகுதியில் வசிக்கும் தன் மகள் வீட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 2 மாதமாக தங்கி உள்ளார். போன 18-ந்தேதி சத்தியவாணி மகள் வீட்டு அருகிலேயே வாக்கிங் போய் கொண்டிருந்தார்.. அப்போது டூவீலரில் வந்த ஒரு மர்மநபர், சத்தியவாணி கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து கொண்டு தப்பிவிட்டார்.
இது தொடர்பாக புகார் அளிக்கப்படவும், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய சென்னை மாநகர கமிஷனர் உத்தரவிட்டார். சிறப்பு படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.
கொள்ளையன்
ஆனால், ஒரு கேமிராவில் கொள்ளையன் தப்பி சென்றதற்கான தடயம் கிடைக்கவில்லை... அதனால், குன்றத்தூர், மாங்காடு, போரூர், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், ஓட்டேரி என கொள்ளையன் எந்த பகுதியில் எல்லாம் தப்பி சென்றானோ அந்த பகுதியில் உள்ள மொத்த கேமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதாவது 175 சிசிடிவி கேமிராக்கள் கடந்த 15 நாட்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
அடகு கடை
இவ்வளவும் செய்தபிறகுதான் கொள்ளையன் சிக்கினான்... என்றாலும் சத்தியவாணியிடம் இருந்து பணம் பறித்த அடுத்த 2 மணி நேரத்தில், நகையை அடகு வைத்து, பணமாக்கி கொண்டு எஸ்.ஆகி உள்ளான் அந்த மர்மநபர். அப்போதுதான், அந்த டூவீலர் நம்பரும் சிக்கியது. கடைசியில் அந்த டூவீலரும் திருட்டு வண்டி என தெரியவந்தது.. ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், தர்கா ஊழியரிடம் இந்த வண்டியை திருடியிருக்கிறான்.
புறா கார்த்திக்
இறுதியில் சிக்கிய அந்த திருடன் பெயர் பெயர் கார்த்திக்.. "புறா" கார்த்திக் என்ற இன்னொரு பெயரும் உண்டு.. காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியாம் இவன்.. வெறும் 28 வயதுதான் ஆகிறது.. ஆனால் கொலை, கொள்ளை, வழிப்பறி கேஸ்களுக்கு பஞ்சம் இல்லை. இந்த புறா கார்த்திக் திருடுவதே கொஞ்சம் வித்தியாசமானது. சென்னைக்கு மாசம் ஒருமுறைதான் வருவாராம்.. முதலில் திருடுவது டூவீலர்களை.. அந்த வண்டியை ஓட்டிக் கொண்டு, மதியம் 3 முதல் 4 மணி வரை சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்வார்.. காஸ்ட்லியான குவார்ட்டர்ஸ் பகுதிகளை நோட்டமிடுவார்.
ஜெயலட்சுமி
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்ய வந்திருப்பதாக சொல்லி, பேச்சு கொடுத்து, அதன்பிறகுதான் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவார். அந்த நகையை 2 மணி நேரத்துக்கும் மேல் கையில் வைத்திருக்க மாட்டாராம்.. உடனே அடகு வைத்து காசு வாங்கி கொண்டு, ஈரோட்டுக்கு போய்விடுவாராம்.. ஏனென்றால், அங்குதான் ஜெயலட்சுமி இருக்கிறார்.. அவருடன் குடும்பமும் நடத்தி வருகிறார்.. இந்த புறா கார்த்திக் வீட்டில் நிறைய புறாக்களை வளர்த்து வருகிறாராம்.. கூடவே விதவிதமான நாய்களும் வளர்கிறதாம்!
நாய்கள்
இவ்வளவு தகவலையும் திரட்டி கொண்டு போலீசார் ஈரோடு சென்றனர்.. நாய் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக போலீசார் சொல்லி புறா கார்த்திக்கை வரவழைத்தனர்.. ஆனால் போலீசாரை பார்த்ததும் தெறித்து ஓடினான் கார்த்திக்.. அப்போது, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டி சென்று போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர்.. அப்போது, கால் தவறி கீழே விழுந்து கார்த்திக்கின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பாராட்டுக்கள்
உடனடியாக ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டு கட்டு போட்டுவிட்டு, சென்னை அழைத்து வந்தனர். இப்போதைக்கு 35 சவரன் நகை, ரூ.3 லட்சத்தை மீட்டுள்ளனர். 175 சிசிடிவி கேமிராக்கள் மூலம் 15நாட்கள் போலீசார் எடுத்து கொண்ட முயற்சியால் இப்போது நீண்ட நாள் சங்கிலி கொள்ளையன் புறா கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்துக்கு கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.