மாலை நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் பகல்நேரங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் மாலை நேரத்தில், 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயலசீமா முதல் உள் தமிழகம் வழியாக குமரிக்கடல் வரை காற்று மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதனாலும், நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம். உள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்ப சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் திருச்சியில் 4 சென்டிமீட்டர், உசிலம்பட்டியில் 3 சென்டிமீட்டர், அறந்தாங்கி, கொடைக்கானல், மதுரை விமான நிலையத்தில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கிய 'அக்னி நட்சத்திரம்' எனும் கத்திரி வெயில் இரு தினங்களுக்கு முன்பு விடைபெற்றது. இருப்பினும், அதன் தாக்கம் இரண்டு தினங்களாக தொடர்ந்து வருகிறது. அத்துடன் மழையில்லாத காரணத்தால் நீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையே தமிழகம் நோக்கி வந்த பானி புயலும், ஒடிசாவிற்கு சென்றதால் அனல் காற்று வீச்சு தமிழகத்தில் அதிகரித்தது.
மழையை எதிர்பார்த்து மக்கள் காத்துக் கொண்டுள்ளனர். குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதே நேரம், தென்மேற்கு பருவமழை இந்த வருடம் மிகத் தாமதமாக கேரளத்தில் துவங்குவதால், தமிழகத்திலும் ஜூன் மாதம் 2 வாரத்தில் தான் மழை பொழியத் துவங்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மழை பெய்யும் காலத்தில், மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தினால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் இல்லாவிட்டால் சிரமப்பட்டு போவோம் என்பதை தற்போது நிலவும் வறட்சி எடுத்துக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications