நாளைக்கு மெரினா பீச் போறீங்களா? சென்னை புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் நாளை, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் தலைநகர் என்பதால் சென்னையில் பல முக்கிய தலைமை அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. எனவே வேலை, மருத்துவம், கல்வி, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில் மக்களின் அன்றாட போக்குவரத்து தேவைகளை புறநகர் ரயில்கள் சிறப்பாக பூர்த்தி செய்து வருகின்றன. குறைந்த கட்டணம், வேகமான சேவை போன்ற காரணத்தால் புறநகர் ரயில் சேவை சாமானிய மக்களுக்கு இன்றியமையாததாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் சென்னையின் புறநகர் ரயில்கள் சுமார் 25 லட்சம் பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஆனால் சில நேரங்களில் இந்த ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதாவது ரயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றப்படுகிறது. அல்லது பராமரிப்பு பணி காரணமாக சில வழித்தடங்களில் ரயில் சேவையின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.
தற்போது வரை சென்னை சென்ட்ரலை மையமாக கொண்டு அரக்கோணம் மார்க்கம், திருத்தணி மார்க்கம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பொன்னேரி, நெல்லூர் வரையிலும், அதேபோல சென்னை கடற்கரையை மையமாக கொண்டு தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி வரையும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் வேளச்சேரி மார்க்கமாக இயக்கப்படும் ரயில்கள் கடந்த சில மாதங்களாக பகுதியளவு மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அதாவது இந்த ரயில்கள் சென்னை கடற்கரையிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தது. இது பயணிகளை கடுமையான சிரமத்திற்கு உள்ளாக்கியது. தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால் மீண்டும் பழையபடி கடற்கரை ரயில் நிலையத்திலிலிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாளை, அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை கடற்கரை-தாம்பரம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நாளை இந்த வழித்தடத்தில் 15-25 நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. பயணிகள் இந்த அறிவிப்புக்கு ஏற்பட பயண திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications