"பாம்பின் குணம் போகவே போகாது" பரமபதம், ஆடுபுலி ஆட்டங்களை கடந்துதான் ஆகனும்..ஓபிஎஸ் காட்டம்
சென்னை: என்ன உதவி செய்தாலும் பாம்பின் குணம் போகவே போகாது. அது தன் விஷத்தை கக்கியே தீரும் என்பார்கள். பாம்பைப் போலவே சில மனிதர்களும் உள்ளனர். அவர்களை விரட்டி அடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா எனும் பெருமைக்குரிய ஈடு இணையற்ற தலைவர்கள் கட்டிக் காத்த அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் அடிப்படை விதிகளெல்லாம் மாற்றப்பட்டு, சின்னாபின்னமாகி, சுக்குநூறாக சிதறுண்டு ஒரு சிலரின் கையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

இதை நினைக்கும்போது, "குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல" என்ற பழமொழிதான் அனைவரின் நினைவிற்கும் வருகிறது. அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்பது மாற்றப்பட்டு இருப்பதும், கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுபவருக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது என்பதும், கட்சியை உருவாக்கிய மா எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், கட்சியைக் கட்டிக் காத்த ஜெயலலிதாவிற்கும் இழைக்கும் துரோகம்.
என்ன உதவி செய்தாலும் பாம்பின் குணம் போகவே போகாது. அது தன் விஷத்தை கக்கியே தீரும் என்பார்கள். பாம்பைப் போலவே சில மனிதர்களும் உள்ளனர். அவர்களை விரட்டி அடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது. இந்தத் துரோகத்தை முறியடிக்க சட்டப் போராட்டங்கள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டு வந்தாலும், இதற்கான நிரந்தரத் தீர்வு தமிழக மக்களிடத்திலும், கழகத் தொண்டர்களிடத்திலும்தான் இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன்.
இதைத்தான் "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அரசியலில் எத்தனையோ பரமபத விளையாட்டுக்கள், ஆடுபுலி ஆட்டங்களை கடந்துதான் ஆகவேண்டும். அரசியல் சதுரங்கத்தில் தீராத விளையாட்டுக்களோடு ஓய்ந்து போகாத ஆட்டக் களங்கள் என்று சலியாத போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இவற்றை நாம் எதிர்த்து நின்று வெற்றி பெறுவதற்கு நமது உழைப்பு மிகவும் அவசியம்.
ஒவ்வொரு கல்லும் தனக்குள் ஒரு சிலையை ஒளித்து வைத்திருக்கிறது. அவற்றை சுத்தியால் உடைத்தால் சிலை உருவாகாது. உளியால் செதுக்க வேண்டும். உழைப்பு எனும் உளியால் விடா முயற்சியுடன் செதுக்கினால் தான் வெற்றி எனும் சிலை வெளிப்படும்.
இதைப் போல நம்முடைய உழைப்பின் மூலமாக, துரோகத்தை துரத்தியடிக்கும் வகையில், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்டும் வண்ணம், அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் கழகத்தின் பொன் விழா என முப்பெரும் விழா திருச்சி, ஜி கார்னர் மைதானத்தில் 24-04-2023 அன்று மாலை 5-00 மணிக்கு துவங்க இருக்கிறது. அனைவரும் வருக.." இவ்வாறு அறிக்கையில் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications