ஜூலை 1முதல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம், செக் புக் கட்டணம் மாற்றம்.. புதிய விதிமுறைகள்!
சென்னை : எஸ்பிஐ வங்கியிலோ அல்லது அதன் ஏடிஎம்களிலோ ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதன்பின்பான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் ஜூலை 1 முதல் நிறைய மாற்றங்களை சந்திக்க போகிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மில் பணத்தை எடுத்தல், வங்கி கிளையிலிருந்து பணம் எடுத்தல் மற்றும் பணம் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்குமான அடிப்படை கட்டணங்களை மாற்றப் போகிறது.
தமிழ்நாட்டுக்கு 33.19 டி.எம்.சி தண்ணீர் திறக்கணும்.. கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
எஸ்பிஐ அறிவிப்பு
ஜூலை 1 முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சேமிப்பு கணக்கு (பிஎஸ்பிடி) கணக்குகள் அல்லது SBI BSBD கணக்குகளுக்கு, ஏடிஎம் மற்றும் வங்கி கிளைகளில் இலவசமாக 4 முறை பணத்தை எடுக்க முடியும். அதற்கு அடுத்த ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படும். இது தவிர, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முதல் 10 காசோலை தாள்களுக்கு கட்டணம் இல்லை. இந்த வரம்பைத் தாண்டி காசோலை புத்தகம் வாங்கினால் ஜூலை 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
4 முறைக்கு மேல் கட்டணம்
அதாவது, எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, எஸ்பிஐ வங்கியிலோ அல்லது அதன் ஏ.டி.எம்.மிலோ எதுவாக இருந்தாலும் 4 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது, அந்த வரம்பை மீறி பணம் எடுத்தால் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜூலை 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
பணம் எடுக்க கட்டணம்
ஜூலை 1 முதல், ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும் என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவை வரி) வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். எஸ்பிஐ ஏடிஎம் தவிர மற்ற வங்கி ஏடிஎம்மில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காசோலை கட்டணங்கள்
ஜூலை 1, 2021 முதல், எஸ்பிஐ தனது பிஎஸ்பிடி கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தும் காசோலை தாள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தப் போகிறது. ஜூலை 1 முதல் புதிய எஸ்பிஐ காசோலை புத்தகக் கட்டணங்கள் அமல்படுத்தப்படுகிறது. ஒரு நிதியாண்டில் எந்தவிதமான கட்டணமும் இன்றி 10 காசோலை தாள்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். அதாவது, ஒரு எஸ்பிஐ பிஎஸ்பிடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் காசோலை புத்தகத்தை தவிர கூடுதலாக பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்: புதிதாக காசோலை புத்தகம் வாங்கினால் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.