ரெண்டு கைகளாலும் குடையை பிடித்து கொண்டு.. ஏரிக்கு வந்த முதல்வர்.. செம்பரம்பாக்கத்தில் ஆய்வு..!
செம்பரம்பாக்கத்துக்கு விரைகிறார் எடப்பாடி பழனிசாமி
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்கட்டமாக 1000 கன அடி உபரி நீர் திறந்துவிட்டப்பட்டது.. 12 மணிக்கு ஏரியின் உபரி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், முதல்வர் செம்பரம்பாக்கத்துக்கு வருகை தந்து, ஏரியை பார்வையிட்டார்.. பாதுகாப்பு பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Recommended Video
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்றே முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் சொல்லி இருந்தனர். மேலும் 22 அடியை தொட்ட பிறகுதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என்று காஞ்சிபுரம் கலெக்டர் நேற்றுகூட தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டது.. மேலும், நீர்வரத்துக்கு ஏற்றபடி படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் என்றும் பொதுப்பணித்துறை தெரிவித்தது.
இதையொட்டி, செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. குறிப்பாக, சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது... அதேபோல, வழுதியம்பேடு, அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்றவும், உத்தரவிடப்பட்டது.
ஏற்கனவே அறிவித்தபடி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது.. இந்த உபரிநீரை எப்படியும் அடையாறு ஆற்றில்தான் திறந்துவிடப்படும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகளில் காலையில் இருந்தே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.. அதன்படி, முதல்கட்டமாக விநாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வருகை தந்துள்ளார்.. அங்கு ஏரியை பார்வையிட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார்.. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
பின்னர், வில்லிவாக்கம் உட்பட மேலும் சில பகுதிகளை முதல்வர் பார்வையிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. அதேபோல, நிவாரண முகாம்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.. எனினும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் முதல்வர் விசாரித்தபடியே உள்ளார்.
முதல்வர் வந்தபிறகே நீரை திறக்க முடிவு செய்திருந்த நிலையில், அவர் வருவதற்கு தாமதமாகும் என்பதால், திட்டமிட்டபடியே 12 மணிக்கு முன்பாகவே நீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து நீர் அங்கு ஆர்ப்பரித்து கொட்டி கொண்டிருக்கிறது. 5 வருடத்துக்கு பிறகு இப்போதுதான் நீர் திறக்கப்பட்டுள்ளதால், செம்பரம்பாக்கம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதனிடையே, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், அதை வேடிக்கை பார்ப்பதற்காக பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.. செல்பி, வீடியோக்களை எடுத்து வருவதால், அவர்களை பாதுகாப்பு போலீசார் அப்புறப்படுத்தி கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications