செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு உபரி நீர் அடையாற்றில் வெளியேற்றப்படுகிறது. அடையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: நிவர் புயலின் தாக்கத்தினால் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு உபரி நீர் அடையாற்றில் வெளியேற்றப்படுகிறது. அடையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அடையாற்றின் கரையோரங்களில் உள்ள கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்பட்டுள்ளது.
24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று மதியம் 22 அடியை நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் படிப்படியாக அதிகரிப்பட்டு தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் உபரி நீர் கால்வாய் வழியாக அடையாற்றில் சேர்ந்து கடலில் கலக்கும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல கிலோமீட்டர் பயணித்து சென்னை பட்டினப்பாக்கம் அருகே வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது. எனவே அடையாறு கடந்து வரும் ஆற்றின் கரையோரம் வசிக்கும் குன்றத்தூர் தொடங்கி அடையாறு, கோட்டூர்புரம் வரைக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள

மழைநீர் தேக்கம் மற்றும் இதர இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள். 044-25384530, 044-25384540. மற்றும் தொலைபேசி எண்.- 1913-லும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190210 என்ற அலைபேசி எண்ணிலும், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190211 என்ற அலைபேசி எண்ணிலும், ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190212 என்ற அலைபேசி எண்ணிலும், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190213 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications