செம ஆஃபர் மக்களே! பிரியாணி கொடுத்தால் தக்காளி.. தக்காளி கொடுத்தால் பிரியாணி.. முண்டியடித்த கூட்டம்!
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கி வரும் ஆம்பூர் பிரியாணி கடை பொதுமக்களைக் கவரும் வகையில் அட்டகாசமான ஆப்பர் ஒன்றை அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது தான் மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், மீண்டும் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி விலை
இப்படி தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் காய்கறி விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ,140 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழையைக் காரணமாகக் கூறி வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறையும் தக்காளி வரத்து
இருப்பினும் தக்காளி வரத்து குறைந்ததே விலை ஏற்றத்திற்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கனமழையால் செடிகளிலேயே காய்கறிகள் அழுகிப் போகும் நிலை உருவாகியுள்ளதாலேயே விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கனமழை குறைந்த சில வாரங்களில் விலை கட்டுக்குள் வந்துவிடும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

தக்காளிக்கு பிரியாணி
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கி வரும் ஆம்பூர் பிரியாணி கடை பொதுமக்களைக் கவரும் வகையில் அட்டகாசமான ஆப்பர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோ தக்காளி கொடுத்தாள் ஒரு பிரியாணி இலவசம் என்றும் அக்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஆப்பர் இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை
இயற்கை சீற்றத்தால் அழிந்து வரும் விவசாயத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கடையின் உரிமையாளர் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை விடத் தக்காளி விலை நாளுக்கு நாள் தொடர்ந்து விலை உயர்கிறது இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications