அதிர்ச்சியில் செங்கல்பட்டு.. ரூ.100 தொட்ட இளநீர்.. பொள்ளாச்சி லாரிகளால் திடீர் சிக்கல்! பின்னணி என்ன
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில், இளநீர் விலை வரலாறு காணாத வகையில் எகிறி உள்ளது.. ஒரு இளநீர் 100 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், தாகத்தைத் தணிக்க உதவும் இயற்கை பானமான இளநீர் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. இந்நிலையில், உள்ளூர் வரத்து குறைந்து பொள்ளாச்சி இளநீர் இறக்குமதி செய்யப்படுவதால் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் சொல்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இளநீரின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு இளநீர் விலை
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.. இதனால் தாகத்தைத் தணிக்க மக்கள் செயற்கை பானங்களை விட இயற்கை பானங்களான இளநீர், மோர், கம்மங்கூழ், தர்பூசணி மற்றும் பழச்சாறுகளை அதிக அளவில் நாடிச் செல்கின்றனர்.. குறிப்பாக, தாகத்தைத் தீர்ப்பதில் முதலிடம் பிடிக்கும் இளநீருக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது..
செங்கல்பட்டு நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இளநீர் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், அதன் விலையைக் கேட்டு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ரூ.100 தொட்ட இளநீர்
சில வாரங்களுக்கு முன்பு வரை 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய வகை இளநீர் தற்போது 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல், 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நல்ல திரட்சியான பெரிய அளவிலான இளநீர் தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஒரு இளநீருக்கு 100 ரூபாய் செலவிடுவதென்பது பெரும் சுமையாக மாறியுள்ளது..
இந்த விலை உயர்வுக்கான பின்னணி குறித்து செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே கடை வைத்துள்ள வியாபாரிகள் விரிவான விளக்கத்தை அளித்துள்ளனர்.
பொள்ளாச்சி லாரிகள்
பொதுவாக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் இருந்துதான் நாட்டு இளநீர் அதிக அளவில் விற்பனைக்கு வருமாம்.. ஆனால் இப்போது உள்ளூர் பகுதிகளில் இளநீர் வரத்து பாதியாகக் குறைந்துவிட்டது.. இதற்கு முக்கியக் காரணமாக, தென்னை மரங்களில் ஏறி இளநீர் பறிக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை சொல்லப்படுகிறது.. போதிய ஆட்கள் கிடைக்காததால் உள்ளூர் இளநீரை சரியான நேரத்தில் சந்தைப்படுத்த முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்..
அதுமட்டுமல்ல, உள்ளூர் வரத்து முற்றிலுமாக குறைந்ததால், இப்போதைக்கு பொள்ளாச்சியில் இருந்து லாரிகள் மூலம் இளநீர் கொண்டு வரப்படுகிறது.. பொள்ளாச்சியில் இருந்து செங்கல்பட்டு வரை கொண்டு வருவதற்கான நீண்டதூர போக்குவரத்து செலவு, டீசல் விலை உயர்வு மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் கூலி என அனைத்தும் அதிகரித்துள்ளதால், இளநீர் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாம்..
இளநீர் வியாபாரிகள் சொல்வதென்ன
இதனால் உள்ளூர் இளநீரை விட பொள்ளாச்சி இளநீரின் கொள்முதல் விலையே அதிகமாக இருப்பதால், சில்லறை விற்பனையில் 100 ரூபாயைத் தொட வேண்டிய சூழல் உருவாகிவிட்டதாக வியாபாரிகள் சொல்கிறார்கள்.
மண்டையை சுள்ளென கொளுத்தி கொண்டிருக்கும் இந்த வெயில் தாங்காமல், தாகம் தணிக்க வேறு வழியின்றி சாமானிய மக்களும் அதிக விலை கொடுத்தே இளநீர் வாங்கி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது..
இளநீர் விலை உயர்வால் சில இடங்களில் விற்பனை மந்தமாக இருந்தாலும், வெயிலின் உக்கிரம் காரணமாக இயற்கை பானங்களுக்கான தேவை குறையவில்லை என்றே தெரிகிறது.. வரும் நாட்களில் வெயில் இன்னும் அதிகரிக்கும் பட்சத்தில், இளநீர் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது..
அதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை மூலம் உள்ளூர் இளநீர் உற்பத்தியை மேம்படுத்தவும், சந்தைப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது..!!!












Click it and Unblock the Notifications