“பிற கட்சி குப்பைகளை.. கொண்டு வந்து ஆட்சியில் வைத்திருக்கிறார் விஜய்!” ஆர்.எஸ்.பாரதி அட்டாக்!
சென்னை: தெருவில் உள்ள குப்பைகளை பொறுக்கி எடுத்துச் செல்வது போல.. பிற கட்சி குப்பைகளை கொண்டு வந்து ஆட்சியில் வைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்திருக்கிறார்.
திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டித்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி, தவெகவின் அரசியலை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

திமுக எடுத்த நடவடிக்கை
மேலும் அவர் பேசியதாவது, "41 பேர் இறந்த போது முகத்தை மூடிக்கொண்டு விமான நிலையத்தில் ஓடி ஒளிந்தவர் விஜய். ஆனால், எங்கள் தலைவர் மு.க .ஸ்டாலின் இரவோடு இரவாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை வேகப்படுத்தியது மட்டுமல்லாமல்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக உடன் இருந்தவர். இதை அப்பகுதி மக்களும் மறந்திருக்க மாட்டார்கள், தமிழ்நாடு மறந்திருக்காது.
நடுநிலையோடு இருந்தோம்
சம்பவம் குறித்து நேர்மையாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார். ஆனால், தமிழ்நாடு காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி, இவர்கள் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி இருந்தனர். கடைசியில் என்ன நடந்தது? கரூர் வழக்கை யாரிடம் விசாரிக்க ஒப்படைத்தோமோ.. அந்த அதிகாரியை தான் தற்போது உளவுத்துறை அதிகாரியாக முதலமைச்சர் விஜய் நியமித்திருக்கிறார். நாங்கள் நடுநிலையோடு இருந்தோம் செய்வதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவை இல்லை.
விசாரணைக்கு பாதிப்பு
இப்படியாக எல்லா விசாரணையும் ஒழுங்காக நடைபெற்றது. ஆனால் இவர்களாகவே சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டார்கள். தற்போது சிபிஐ விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இரண்டாவது அக்யூஸ்ட். இப்படி இருக்கையில் அவர் சட்டம் தெரியாமல் தன்னுடைய இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்கிறார்.
வழக்கு குறித்து உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், விசாரணைக்கு இடையூறு செய்யும் வகையில் அமைச்சர் பேசி இருக்கிறார். எனவே இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் என்கிற முறையில் நீதிமன்றத்தில் நான் முறையிட இருக்கிறேன்.
கைது அவசியமா?
இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்ற நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது அவசியமா? இதற்கு முன்னர் இருந்த ஆட்சி காலத்தில அவதூறு வழக்குகளில் யாரும் கைது செய்யப்பட்டது கிடையாது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் என் மீது 17 அவதூறு வழக்குகளும், தலைவர் மு க ஸ்டாலின் மீது 40 வழக்குகளும் இருந்தன. ஆனால் யாரும் கைது செய்யப்படவிலலை. அப்படி இருக்கையில் தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
குப்பைகளை கொண்டு வந்த விஜய்
எம்.எல்.ஏ என்கிற முறையில் ஆய்வுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் போனபோது கைது செய்யப்பட்டிருப்பது கடுமையாக கண்டனத்திற்கு உரியது. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
தெருவில் இருக்கும் குப்பைகளை லாரிகளில் ஏற்றி செல்வார்களே! அதுபோல இன்று விஜய், ஒவ்வொரு கட்சியில் இருக்கும் குப்பைகளை கொண்டு வந்து ஆட்சியில் வைத்திருக்கிறார். மிக விரைவில் இவர்களால்தான் இவருக்கு ஆபத்து வரும்" என பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications