அனிதா ராதாகிருஷ்ணன் கைதை கண்டித்து போலீசை சுற்றி வளைத்த ஆதரவாளர்கள்.. என்ன நடந்தது?
தூத்துக்குடி: முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றிய போது, அவரின் ஆதரவாளர்கள் வாகனத்தை சுற்றி நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசினார். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் சார்பாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிபதி இளந்தரையன், ஒரு எம்எல்ஏ-வாக இருப்பவர் இதுபோல பேச வேண்டுமா? என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்திருக்கின்றனர்.
ஆத்தார் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். தனது சொந்த வாகனத்திலேயே அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வருகிறேன் என்று கூறிய போதும், போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றினர். போலீசார் கைது செய்வதாக கூறிய போதே, அவரின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்ப தொடங்கினர்.
போலீஸ் ஜீப்பில் அனிதா ராதாகிருஷ்ணனை ஏற்றிய போதும் கூட, அவரது ஆதரவாளர்களை போலீசார் வாகனத்தை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. சுமார் 15 நிமிடங்களுக்கு பின் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி, அனிதா ராதாகிருஷ்ணனை எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து எஸ்பி அலுவலகத்தில் அவரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடியுள்ளனர். அவரிடம் முதற்கட்ட விசாரணை முடிவடைந்த பின், மருத்துவ பரிசோதனைக்கு அழைக்க செல்லப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் முன் ஜாமின் கோரி மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் அவதூறு வழக்குகளில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்தில் கூட கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது கிடையாது. திமுக ஆட்சியின் போது அவதூறு வழக்குகளில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் முதல்வராக விஜய் பதவியேற்று 2 மாதங்களுக்குள் திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications