விழிஞ்ஞம் துறைமுகத்தில் 49% பங்குகளை வாங்கியது MSC TiL: அதானி குழுமத்துடன் ரூ.13,220 கோடி மெகா டீல்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அமைந்துள்ள அதானி குழுமத்திற்குச் சொந்தமான விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் (Vizhinjam International Seaport), உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான MSC-யின் டெர்மினல் முதலீட்டுப் பிரிவான TiL, 49 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த 49 சதவீத பங்குகளுக்காக MSC நிறுவனம் சுமார் 1.397 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹13,220 கோடி) முதலீடு செய்கிறது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், அதானி போர்ட்ஸ் (APSEZ) நிறுவனம் 51 சதவீத பங்குகளுடன் துறைமுகத்தின் பெரும்பான்மை கட்டுப்பாட்டைத் தன்வசம் வைத்திருக்கும்.

இந்தியத் துறைமுகக் கட்டமைப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய ஒற்றை வெளிநாட்டுத் தனியார் முதலீடு இதுவாகும். முந்த்ரா மற்றும் காமராஜர் (எண்ணூர்) துறைமுகங்களைத் தொடர்ந்து, அதானி மற்றும் MSC குழுமங்கள் இணையும் மூன்றாவது பெரிய திட்டம் இதுவாகும்.
துறைமுகத்தின் முக்கியத்துவம்
இந்தியாவின் முதல் ஆழ்கடல் மெகா கன்டெய்னர் டிரான்ஸ்ஷிப்மென்ட் முனையமான விழிஞ்ஞம், சர்வதேச கடல் வணிகப் பாதையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த புதிய கூட்டணியின் மூலம் துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறன் அதிகரிப்பதோடு, உலகளாவிய கப்பல் போக்குவரத்து இணைப்புகளும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துறைமுகத்தின் சாதனைகள்
APSEZ-வின் தகவலின்படி, நிதி ஆண்டு 2026-ல் விழிஞ்சம் துறைமுகம் 1.3 மில்லியன் TEUகளை கையாண்டுள்ளது. செயல்பாட்டுக்கு வந்த வெறும் 18 மாதங்களுக்குள் 2 மில்லியன் TEU-வைத் தாண்டிய முதல் இந்திய துறைமுகம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை 950க்கும் மேற்பட்ட கப்பல்களை கையாண்ட இந்தத் துறைமுகம், ஜூன் 2026-ல் தனது 1,000ஆவது கப்பலையும் வரவேற்றது.
இந்திய துறைமுகங்களில் அதிக எண்ணிக்கையிலான அல்ட்ரா லார்ஜ் கன்டெய்னர் வெஸல்கள் (ULCVs) - 70க்கும் மேற்பட்டவற்றை - கையாண்ட சாதனையும் விழிஞ்சத்திற்கு உண்டு. 300 மீட்டருக்கு மேல் நீளமுள்ள 283 கப்பல்களையும் இது வரை கையாண்டுள்ளது.
கேரள அரசின் நிலைப்பாடு
இந்த பங்குகள் விற்பனை குறித்து அதானி குழுமம் தங்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. ஒப்பந்த விதிகளின்படி, 25 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை மாற்றும்போது மாநில அரசின் அனுமதி அவசியம் என்பதால், இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் விழிஞ்ஞம் துறைமுகத்தை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு மிகச்சிறந்த வர்த்தக மையமாக மாற்றும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பெரிய வெளிநாட்டு முதலீடு
இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்பில் மிகப் பெரிய வெளிநாட்டு தனியார் முதலீடுகளில் ஒன்றாக இந்த ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் விவரித்துள்ளன. MSC-வின் துணை நிறுவனமான TiL, உலகம் முழுவதும் ஐந்து கண்டங்களில் 100-க்கும் மேற்பட்ட கொள்கலன் முனையங்களை இயக்கி வருகிறது. இதன் ஆண்டு கொள்கலன் கையாளும் திறன் 70 மில்லியன் TEU-க்கு மேல் உள்ளது.
அதானி போர்ட்ஸ் (APSEZ) தற்போது இந்தியாவில் 15 துறைமுகங்கள் மற்றும் முனையங்களையும், நான்கு சர்வதேச துறைமுகங்களையும் நடத்தி வருகிறது. ஆண்டுக்கு 653 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறனைக் கொண்ட இந்நிறுவனம், 2030-க்குள் 1 பில்லியன் டன் சரக்கு கையாளும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications