53,500 பேருக்கு வேலை... $11.5 பில்லியன் அலுமினியம் மெகா திட்டத்தை தொடங்கும் அதானி - IRH!
இந்தூர்: அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அபுதாபியைச் சேர்ந்த IRH நிறுவனம் ஆகியவை இணைந்து, ஒடிசாவில் சுமார் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 1.08 லட்சம் கோடி) மதிப்பிலான ஒருங்கிணைந்த அலுமினிய திட்டத்தை உருவாக்க ஒடிசா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த மாபெரும் திட்டம் 50:50 என்ற விகிதத்திலான கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இது ஒடிசா மாநிலத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாகவும், இந்தியாவின் உலோகத் துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய வெளிநாட்டு முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்
இந்த பிரம்மாண்டமான கிரீன் எனர்ஜி திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 4 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட அலுமினா சுத்திகரிப்பு ஆலை, 2 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட அலுமினியம் உருக்காலை, 4,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் மற்றும் 1 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட உற்பத்தி பூங்கா ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த ஒருங்கிணைந்த திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டத்தில் சுமார் ரூ. 66,000 கோடியும், இரண்டாம் கட்டத்தில் சுமார் ரூ. 44,000 கோடியும் முதலீடு செய்யப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி
இந்தத் திட்டம் ஒடிசா மாநிலத்தில் பல ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்டுமானப் பணிகளின் போது சுமார் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆலைகள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் போது சுரங்கம், சுத்திகரிப்பு, அலுமினியம் உற்பத்தி மற்றும் கீழ்நிலை உற்பத்திப் பிரிவுகளில் நேரடியாகச் சுமார் 18,500 பேருக்கு வேலைகள் கிடைக்கும். இது தவிர போக்குவரத்து, பொறியியல், பராமரிப்பு மற்றும் இதர துணைத் தொழில்கள் மூலமாகவும் ஒடிசாவில் கணிசமான மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்த முதலீட்டின் மூலம் சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு முதல் இறுதி தயாரிப்பு வரையிலான ஒடிசாவின் அலுமினிய தொழில் சங்கிலி மேலும் வலுப்பெறும் என்றும், உலகளாவிய அலுமினிய சந்தையில் ஒடிசாவின் பங்கு அதிகரிக்கும் என்றும் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். இந்த கூட்டு முயற்சி ஒடிசாவின் நீண்டகால தொழில் வளர்ச்சிக்கு உதவுவதோடு, இந்தியாவின் தொழில்முறைப் போட்டித்தன்மையை மேம்படுத்தும் என அதானி குழுமம் மற்றும் ஐஎச்சி குழுமத்தின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல், அரசு ஒப்புதல்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல் போன்ற அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications