தவெகவுக்கு சென்றவர்கள் துரோகிகள்.. விராலிமலையில் அதிமுக வெற்றி உறுதி!.. பழனிவேல்
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் என்றும், அவர்கள் விலகியதால் அதிமுக மேலும் வலுவடைந்துள்ளது என்றும் விஜயபாஸ்கருக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட அதிமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார். மேலும், விராலிமலை தொகுதியில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநில அரசியல் களம் பல்வேறு அதிரடியான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் தவெகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வு மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுகவினர் திரளானோர் அதிமுக அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் என்றும், அவர்கள் விலகியதால் அதிமுக மேலும் வலுவடைந்துள்ளது என்றும் விஜயபாஸ்கருக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட அதிமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் என அனைவரும் வந்துள்ளோம். ஆனால், அவர் தவெக நிகழ்ச்சியில் ஒரு பொய்யான தகவலை விஜயபாஸ்கர் அங்கு கொடுத்திருக்கிறார்.
40 பேர், 80 பேர் தவெகவில் இணைந்திருப்பதாக பொய்யான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் தான் இந்த கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளார். இங்கு சம்பாதித்து எல்லாம் செய்துவிட்டு அங்கு சேர்ந்துள்ளார். தீயசக்தி என்று கூறிக் கொண்டிருக்கும் ஆளும் தூயசக்தி அவரை சேர்த்திருக்கிறது. அவர் மேல் குட்கா கேஸ் உள்ளது.
போதை இல்லாத அரசாங்கம் நடத்த வேண்டும் என்று சொல்லும் தவெக அவரை எப்படி கட்சியில் சேர்த்திருக்கிறது என்று தெரியவில்லை. இந்தக் கட்சியை அழித்தது போல தான், அங்கு சென்று அந்தக் கட்சியையும் அழிக்கப் போகிறார். தவெக நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டது குறித்த கேள்விக்கு, நிகழ்ச்சியில் பேச பேசவே ஆயிரம் பேருக்கும் மேல் வெளியில் சென்றுவிட்டனர்.
விராலிமலை தொகுதியில் இருந்து 150 பேர் சென்றிருக்கின்றனர். மொத்தமாக 6 தொகுதியில் இருந்து 500 பேர் சென்றிருக்கின்றனர். நாங்கள் எல்லோரும் சேர்ந்து தான் எடப்பாடியை பொதுச் செயலாளராக்கினோம் என்று தவெகவில் இணைந்த அமைச்சர்கள் கூறியது தொடர்பான கேள்விக்கு, அவர் மட்டும் எப்படி பொதுச் செயலாளராக்க முடியும். எங்களைப் போன்று அடிமட்ட தொண்டர்களில் இருந்து நிர்வாகிகள் வரை இணைந்து தான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தோம்.
விஜயபாஸ்கரை உருவாக்கியது பொதுச் செயலாளர் தான். புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்தப் பின்னடைவும் இல்லை. அதிமுக விராலிமலை தொகுதியில் 100 சதவீதம் வெற்றி பெறும் என்று உறுதியளித்தார். துரோகிகள் எங்கள் கட்சியைவிட்டு விலகிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அதிமுக ஆட்சி வந்திருந்தால் இந்த துரோகிகள் கட்சிக்குள்ளேயே இருந்திருப்பார்கள். இப்போது எடப்பாடி பழனிசாமி அவரை சரியாக அடையாளம் கண்டு கொண்டார்.
அம்மாவுடைய ஆத்மாவின் ஆசியால் அதிமுகவை விட்டு துரோகிகள் அகன்று விட்டனர். இப்போதுள்ள தொண்டர்கள் எல்லோரும் உண்மையான தொண்டர்கள். விராலிமலையில் இந்த முறை இரட்டை இலை நிச்சயமாக ஜெயிக்கும். அடுத்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராவது உறுதி. வரும் இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications