ஒரு க்ளூவும் கிடைக்கலை.. டிவியை சத்தமாக வைத்துவிட்டு 3 பேரை கொன்ற படுபாவிகள்.. அதிர்ச்சியில் சென்னை
சென்னையில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்
சென்னை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 3 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர் மர்மநபர்கள்.. டிவியை சத்தமாக வைத்து விட்டு இந்த படுகொலையை மர்மநபர்கள் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. சென்னையில் நடந்த இந்த பயங்கரம் குறித்து போலீசார் துரிதமான விசாரணையில் இறங்கி உள்ளனர்!
சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.. இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார்.
பேசின் பிரிட்ஜ் பகுதியில் பிங்கி வசித்து வருகிறார்.. அடிக்கடி பிங்கி அம்மா வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.. அப்படித்தான் நேற்றும் வர எண்ணின்னார்.. அதற்காக போன் செய்திருக்கிறார்.. ஆனால் வீட்டில் யாருமே போன் எடுக்கவில்லை.
மகள் பிங்கி
அதனால், நேற்றிரவு 7.30 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தார்.. அங்கே பெட்ரூமில் அம்மா, அப்பா, அண்ணன் என 3 பேருமே ரத்த வெள்ளத்தில் சடலமாக விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தார்.. அலறி அடித்து கொண்டு வெளியே ஓடியதில் அக்கம்பக்கத்தினர் எல்லாம் திரண்டு வந்தனர்.. பிறகு யானைகவுனி போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து, 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
நெற்றியில் குண்டு
அப்போதுதான், 3 பேரின் உடம்பிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது தெரியவந்தது.. 3 பேரையுமே நெற்றியில்தான் சுட்டுக் கொன்றுள்ளனர்.. இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறிந்த போலீசார் உடனடி விசாரணையில் இறங்கினர். தலித்சந்த் ஃபைனான்ஸ் பிசினஸ் செய்து வந்துள்ளார்.. இவருடன் அவருடைய தம்பி, அவரது மகன்கள் எல்லாரும் சேர்ந்துதான் இந்த தொழிலை கவனித்து வந்துள்ளனர்.
சொத்து தகராறு
ஒருவேளை சொத்து தகராறு காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஷீத்தல் தன் மனைவியை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.. ஷீத்தலின் மனைவி மற்றும் மகள்கள் புனேவில் வசித்து வருகிறார்களாம். அவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுளளது. ஷீத்தலிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார் அவரது மனைவி.. ஜீவனாம்சம் வழக்கும் நடந்து கொண்டிருக்கிறதாம்.
விசாரணை
முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.. சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.. கொலை நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலையாளிகள் சென்னையை விட்டு வெளியேறி விடாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடமாநிலம்
இந்த கொலையை எத்தனை பேர் சேர்ந்து செய்தார்கள் என்றும் இதுவரை தெரியவில்லை.. இந்த பகுதியில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்தான் குடியிருக்கிறார்கள்.. வந்த கொலையாளிகள், அக்கம் பக்கத்தவருக்கு சத்தம் கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக டிவி சத்தத்தை அதிகமாக வைத்து, அதன்பிறகு கொன்றிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. சாயங்காலம் நேரத்தில் அசால்ட்டாக வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்றால், அநேகமாக தெரிந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அதிர்ச்சி
இது திட்டமிட்ட கொலையும் கூட என்று சொல்லும் போலீசார், பலியானவர்கள் மர்மநபர்களிடம் போராடியதற்கான அறிகுறி எதுவுமே இல்லை என்றும் கூறுகிறார்கள். இருந்தாலும், இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் வழக்கமாக வடமாநிலத்தில் தான் சர்வ சாதாரணமாக நடைபெறும்... ஆனால் இன்று நம் சென்னையிலேயே நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.