விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பாதை.. அம்பலபடுத்திய ஆர்டிஐ.. தமிழக அரசுக்கு நெருக்கடி
சென்னை: சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு உடனே சமர்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த விமானம் நிலையம் டூ கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு போதிய ஆர்வம் காட்டாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை மாநகரில் புறநகரையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் வசிப்பார்கள் என்று தெரிகிறது. கிட்டத்தட்ட சென்னையின் மையப்பகுதியில் இருந்து 55 கிமீ சுற்றளவில் உள்ள மக்கள் அடர்த்தி தமிழ்நாட்டில் வேறு எங்குமே இல்லாத அளவிற்கு உள்ளது. வரும் காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு வரையில் தாங்க முடியாத அளவிற்கு மக்கள் நெருக்கமும் வாகன நெருக்கமும் ஏற்படபோகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தற்போதைய நிலையில் சென்னையின் மையப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, பரங்கிமலை - சென்னை சென்ட்ரல், விமானநிலையம் - விம்கோநகர் ஆகிய இரண்டு வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது அடுத்தகட்டமாக இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில், 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் (மாதவரம் டூ சிறுசேரி சிப்காட், மாதவரம் பால்பண்ணை டூ சோழிங்கநல்லூர், பூந்தமல்லி டூ கலங்கரை விளக்கம்) திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த மூன்று வழித்தடங்களில் பணிகள் முடிந்தால் சென்னை மாநகரின் எல்லா பகுதிக்குள்ளும் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும் என்ற நிலை உருவாகிவிடும். இந்த திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அனேகமாக அடுத்த ஒன்றரை வருடத்தில் பூந்தமல்லி முதல் மவுண்ட் வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு பணிகள் அந்த பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆனால் சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை ஏன் மெட்ரோ ரயில் பாதை அமைப்பது குறித்து அரசு 10 வருடம் முன்பே ஆர்வம் காட்டவில்லை என்ற கேள்விகள் எழுகிறது. மெட்ரோ வழித்தடம் ஒன்று மட்டும் இரண்டை பொறுத்தவரை மின்சார ரயில்கள் இல்லாத வழித்தடத்தில் தான் உருவாக்கப்பட்டன. 3வது, 4வது, 5வது வழித்தடம் மின்சார ரயில் இருந்தாலும், நேரடியாக இருபகுதிக்கு வர முடியாத அளவிற்கு உள்ள வழித்தடங்களே இருக்கின்றன.
ஆனால் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை உள்ள வழித்தடத்தில் ஏற்கனவே மின்சார ரயில் வழித்தடம் இருக்கிறது. இந்த வழித்தடம் முழுமையாக ஜிஎஸ்டி சாலையை ஒட்டியே செல்கிறது. இந்த வழித்தடம் செங்கல்பட்டு வரை அப்படியே ஜிஎஸ்டி சாலையை ஒட்டியே செல்கிறது. இதன் காரணமாகவே விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லையா என்ற கேள்விகள் எழுகிறது.
அதேநேரம் மாறிவரும் போக்குவரத்து தேவைகள் மற்றும் மக்கள் விரும்பும் வசதிகள் காரணமாக கண்டிப்பாக விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம் வெற்றி பெறும் என்றும், சென்னையின் புறநகர் பகுதி மக்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்தே சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ தொலைவில் நீட்டிப்பு செய்ய அரசு திட்டமிட்டது. இப்பாதை மற்றும் 12 நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.4,528 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தவழித்தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலக்ஷ்மி நகர், திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 12 மெட்ரோ நிலையங்கள் உயர்மட்ட பாதையில் அமைக்கலாம் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்தலாம் என்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் தயார் செய்து தமிழக அரசு ஒப்புதலுக்கு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் அனுப்பிவிட்டது. அதன்பிறகு, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை 2022-ம் ஆண்டு செப்டம்பரில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மதிப்பீட்டின்படி திட்ட செலவு மட்டும் ரூ. 4,625 கோடியாக உயர்ந்திருக்கிறது..
இதனிடையே விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை உள்ள வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பித்து 25 மாதங்களை கடந்தும் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. அதேநேரம் 2024-25-ம் ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில், சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு விரைவில் ஒப்புதல் வழங்கி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு நிதி பங்களிப்புக்கு அனுப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது
ஆனால், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்துநிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் நிதி பகிர்வு ஒப்புதலுக்கு தமிழக அரசு இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு தமிழக அரசு உடனே ஒப்புதல் அளித்தது. மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications