ஈரான் மீது தொடரும் அமெரிக்க தாக்குதல்.. 2வது நாளாக ஏவுகணை ‘அட்டாக்’.. மீண்டும் போர் பதற்றம்
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே பனாமா கொடியுடன் கச்சா எண்ணெய் கொண்டு சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமான அமெரிக்கா 2வது நாளாக ஈரான் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பிறகு அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஈரான் மூடிய ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தது. ஆனாலும் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி அமெரிக்கா, நேற்று முதல் ஈரானை தாக்க தொடங்கியது. நேற்றைய தினம் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு மையங்கள், கடலோர ரேடார் தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தி அருகே பனாமா நாட்டின் கொடியுடன் கச்சா எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கோபமான அமெரிக்கா 2வது நாளாக இன்றும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி அருகே தெற்கு ஈரானின் சிரிக் தீவு மற்றும் கெஷ்ம் தீவில் உள்ள கிராமங்களில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த பகுதிகளில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் தொடர்பான சத்தங்கள் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் (CENTCOM) கூறுகையில், ''அமெரிக்க அதிபரின் நேரடி உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மதிக்க தவறியதற்கான நேரடி பதில் இதுதான். '' 'எம்.வி. எவர் லவ்லி' (M/V Ever Lovely) கப்பல் மீதான தாக்குதலுக்கு நேற்று அமெரிக்கா பதிலடி கொடுத்த பிறகும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க ஈரானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்று அதிகாலை 4:30 மணியளவில் 'எம்.டி. கிகு' (M/T Kiku) கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த கப்பல் 2 மில்லியனுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் கப்பலுடன் பானாமா நாட்டின் கொடியுடன் இந்த கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி அருகே பயணித்தது. இந்த தாக்குதல் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளது. இதனால் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு இருநாடுகளும் மாறி மாறி தாக்கி கொள்வது இருநாடுகள் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை காட்டுகிறது.












Click it and Unblock the Notifications