அண்ணா கட்டினார்; ஸ்டாலின் அழகாக்கினார்! - அண்ணாநகர் டவர் எப்போது கட்டியது தெரியுமா?
சென்னை: கடந்த 12 ஆண்டுகளாக பேய் பங்களாவைப் போல் பாழடைந்து கிடந்த அண்ணா நகர் டவர், இப்போது அழகாக காட்சி அளிக்கிறது. பளபளக்கும் இந்தக் கோபுரத்தைப் பார்க்க பொதுமக்கள் கும்பல் கும்பலாக வருகின்றனர்.
திமுகவின் இந்த ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் இப்படி பல பாரம்பரிய கட்டடங்கள் புதிய பொலிவைப் பெற்றுள்ளன. இந்தச் சிறப்பான மாற்றம் குறித்து சென்னை மக்கள் என்ன நினைக்கிறார்கள்? வாருங்கள் கேட்போம்.

வில்லிவாக்கத்தில் இருந்து பார்வையிட வந்துள்ள இளைஞர் கலாநிதி, "பெரிய எதிர்ப்பார்ப்போடு வந்திருக்கிறேன். 12 வருஷம் ஆகிவிட்டது. பல ஆண்டுகளாக இந்தப் பகுதி மக்கள் உடற்பயிற்சி செய்யவும், பொழுது போக்கவும் சிறந்த இடமாக இந்த அண்ணாநகர் பூங்கா இருந்து வந்திருக்கிறது.
இங்குள்ள கோபுரம் மீது ஏறி பார்ப்பதே சிறந்த அனுபவம். 12 வருஷமாக காத்திருக்கிறேன். இன்றுதான் மேலே ஏறி பார்த்துவிட்டு வந்தேன். இதை மீண்டும் புதுப்பித்து கட்டியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. இனிமேல் காலை நடைபயிற்சியை சிறப்பாக செய்யலாம். இதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த அரசுக்கு நன்றி சொல்லலாம்" என்கிறார்

"இந்த அண்ணாநகர் டவர்தான் இந்தப் பகுதிக்கே அடையாளம். அந்த அடையாளத்தை 10 வருஷத்துக்கு மேலாக இந்த அண்ணா நகர் இழந்திருந்தது. அதை மீண்டும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காகவே அவரைப் பாராட்டுகிறோம்.
12 வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் குடும்பத்தோடு வந்தோம். ஆனால், மழை பெய்து வருகிறது. அதனால் முழுவதுமாக சுற்ற முடியவில்லை. ஆனாலும் இந்த அனுபவம் நன்றாக இருக்கிறது" என்கிறார் இதே நகரில் வசிக்கும் ராஜேந்திரன்

அவருடன் வந்திருந்த அவரது மனைவி, "இதன் மேல் ஏறி நின்று பார்த்தா சென்னை முழுக்க தெரியும். செம ஹேப்பியா இருக்கும்" என்கிறார்
இவர்களுடன் வந்திருந்த சிறுவன், இளந்திரையனுக்கு மழை வந்ததால் அண்ணா நகர் டவர் மீது செல்ல முடியவில்லை என்று கோபம். மழைவிட்ட பிறகு மேலே ஏறி போய் பார்த்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என அவரது பெற்றோரைக் கண்டித்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். அவனை அவனது தாத்தா சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

இந்த அண்ணாநகர் கோபுர பூங்கா, 97.60 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் பாழடைந்து கிடத்தாகவும் அதை தினம் பார்க்கவே மனம் வேதைப்பட்டதாகவும் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் இந்தக் கோபுரத்தைப் பார்வையிட வந்திருந்த பெரியவர் ஒருவர்.
மேலும் அவர் நம்மிடம், 'பல சினிமாக்களில் இந்தக் கோபுரம் இடம்பெற்றுள்ளது. அது உங்களுக்குத் தெரியுமா?' என்றும் கேள்வி எழுப்புகிறார்.

இந்த அண்ணா நகர் கட்டப்பட்டதிலிருந்து படிப்படியாக இதன் வளர்ச்சியைப் பார்த்து இருப்பவர் இவர். நாம் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டால், அதை உள்வாங்கிக் கொண்டு பதிலளிக்க அவரால் இயலவில்லை. அவரது காதில் பிரச்சினை, ஆகவே கேட்டு பதிலளிக்க முடியாது என்றார் உடன் வந்திருந்த அவரது பெயரன்.
இந்தப் பூங்கா திறந்த செய்தி அறிந்தவுடன் பொதுமக்கள் அதிகமாக வந்தார்களோ இல்லையோ, ஆனால் நிறைய யூடியூப்பர்ஸ் வந்து கேமிராவும் கையுமாக குவிந்துவிட்டார்கள். அப்படி ஒரு யூடியூப்பர்தான் உங்கள் சைமன். அவர் வளைத்து வளைத்து பல கோணங்களில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அவரது அனுபவம் எப்படி?

"இந்தப் பூங்கா 1968 ஆம் ஆண்டு கட்டினது. இதை அந்தக் காலத்தில் துணை குடியரசுத்தலைவராக இருந்த வி.வி.கிரிதான் திறந்துவைத்திருக்கிறார். அன்றைக்கு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் அண்ணா. அவரது ஆட்சியில் திறக்கப்பட்டதுதான் இந்த அண்ணா நகர் டவர்.
இன்றைக்கு இதை அண்ணா நகர் டவர் என்று சொல்கிறோம். ஆனால், இதற்கு அந்தக் காலத்தில் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா டவர் என்றுதான் பெயர். பின்னால் இது அண்ணா டவர் என மாறியது. இது மொத்தம் 135 அடி. இதில் 12 அடுக்குகள் உள்ளது. நான் இப்போதுதான் முதன்முறையாக வந்திருக்கிறேன். பார்க்கவே பிரமிப்பா இருக்கிறது. இந்தப் பூங்காவை மேல் இருந்து பார்க்கும் போது சுற்றிலும் காடு போல் உள்ளது.

இந்த கோபுரத்தின் 12 மாடிக்களுக்கு செல்லும் வழிகளில் மிக அழகாக வண்ண ஓவியங்கள் வைந்துள்ளார்கள். அதை பார்ப்பதே தனி அனுபவமாக இருக்கிறது. இதன் மொத்த பரப்பளவு 15 ஏக்கர். அவ்வளவு இடங்களிலும் மரங்கள் அடந்து வளர்ந்துள்ளன. சென்னை அண்ணா நகர் என்பது இன்றைக்கு விலை மதிப்புமிக்க ஏரியா. அதில் 15 ஏக்கரில் காடு போல் மரங்கள் இருப்பது ஆச்சரியம்தான்.
இன்றைக்கு அண்ணா நகர் என்றாலே ஐஏஎஸ் கோட்சிங் செண்டர்களின் ஹப் ஆக உள்ளது. ஆகவே அங்குப் படிக்கும் மாணவர்கள் ஏராளமானவர்கள் இந்தப் பூங்காவின் நிழலில் அமர்ந்துதான் படித்துவருகிறார்கள். அந்தளவுக்கு பலருக்கும் போதி மரமாக இந்த இடம் உள்ளது.

இங்குதான் 1968இல் வெளியான 'கலாட்டா கல்யாணம்' திரைப்படத்தை எடுத்தார்கள். அதேபோல 1972இல் 'பிள்ளையோ பிள்ளை' என்ற படத்தை எடுத்துள்ளார்கள். சத்யராஜ் நடித்த அண்ணா நகர் முதல் தெரு படம்கூட எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்" என்கிறார்
அயனாவரம் பகுதியை சேர்ந்த சேகர், "எங்களின் பசுமையான நினைவுகளால் இந்த இடம் நிரம்பி வழிகிறது. மேலேயேறி போனால் அந்தக் கால நினைவுகள் எல்லாம் மீண்டு வந்துவிடும். பள்ளிக்கால நினைவுகளை அப்படியே அசைப்போட்டுக் கொண்டு மேலேயே தங்கிவிடலாம் என ஒவ்வொரு முறையும் தோன்றும்.
கடந்த 12 ஆண்டுகளாக அந்த நினைவுகளில் மூழ்க முடியாமல் இருந்தது. இப்போது அதற்கு மீண்டும் உயிர் கிடைத்துள்ளது" என்கிறார்
இந்தப் பூங்காவை சுற்றி வனம் போல் மரங்கள் உள்ளதால், பறவைகளின் கீச் ஒலிகளுக்கு பஞ்சமில்லை. அதேபோல் தகிக்கும் வெயிலிலும் ஜில் என்று குளுகுளு குளிர் அடிக்கிறது. இங்குள்ள குளத்தில் நீர் பீய்ச்சி அடிப்பதைப் பார்க்கவே இன்பமாக உள்ளது. அதில் மீன்களும், வாத்துகளும் மேய்கின்றன. அதன் அழகோ மனதை அள்ளுகிறது. இந்த அளவுக்கு நகரின் மையப் பகுதியில் அமைதியான ஓரிடம் கிடைப்பது அரிது.
அந்த அரிய அனுபவத்தை மீண்டும் மக்களின் கைகளில் ஒப்படைத்திருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications