சென்னை வேண்டவே வேண்டாம்.. பெங்களூருவுக்கு செல்லும் பிரபல நிறுவனம்.. சிஇஓ அறிவிப்பு
சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு ஃபிரகாரியா (Fragaria) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை வேண்டாம் என்று தனது தலைமை அலுவலகத்தை பெங்களூருவுக்கு கொண்டு செல்ல உள்ளது. இதற்கான அறிவிப்பை நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷ் வரதராஜன் அறிவித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு Fragaria என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் விவசாய பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக ஸ்டாபெர்ரி விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி தொழில் செய்து வருகிறது.

ஸ்டாபெர்ரி செடிகள் வெப்ப பகுதிகளை விட குளிர் பிரதேசங்களில் நன்கு செழித்து வளர்ந்து அதிக மகசூலை தரும். ஆனால் இந்த நிறுவனத்தை தமிழ்நாட்டை சேர்ந்த ஹர்ஷ் வரதராஜன் தொடங்கினார். இதனால் சென்னையை தலைமையிடமாக கொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
இந்நிலையில் தான் ஃபிரகாரியா நிறுவனம் தனது தலைமை அலுவலகத்தை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஃபிரகாரியா நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷ் வரதராஜன் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛ஃபிரகாரியா பெங்களூரை நோக்கி நகர்கிறது. ஒரு தமிழ் பையனாக தமிழ்நாட்டில் இருந்து உலகளாவிய தயாரிப்பை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டேன். இதற்கானக சென்னையில் அனைத்து பணிகளையும் செய்தோம்.
அனைத்து சவால்களையும் மீறி பிரிமீயம் ஸ்ட்ராபெரிகளை இங்கு வளர்க்க முடியும் என்று நிரூபித்தோம். ஆனால் காலநிலை, சந்தையை அணுகுதல், விவசாயத்துக்கு ஆதரவான சட்டம், வெளிநாட்டினர் வாழக்கூடிய தன்மை, ஸ்டார்ட்அப் வேகமாக வளரும் சூழல் உள்ளிட்டவை பெங்களூருவுக்கு நகர்வதை தவிர்க்க முடியாததாக்கி உள்ளது.
இருப்பினும் சென்னை எப்போதும் எங்கள் முதல் தாயகமாக இருக்கும். எங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பண்ணை சென்னையில் தொடரும். எதிர்காலத்திலும் பண்ணைகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான காரணங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications