ஸ்டாலின் குடும்பம் பற்றி ஆபாச கருத்து! கைதுக்கு தயாரான போலீஸ்.. 6 பிரிவில் வழக்கு.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பம் குறித்து அவதூறு பரப்பிய நபர்கள் மீது 6 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி பற்றி அவதூறாக கருத்து பரப்பப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி பற்றி வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் பரப்பப்பட்டது.

எக்ஸ் பக்கத்தின் ட்விட்டர் ஸ்பேஸில் நடக்கும் உரையாடல் போன்ற வடிவில் வெளியான ஆடியோவில் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி குறித்து ஆபாசமான கருத்துகளை சிலர் பேசியிருந்தனர். இதுதொடர்பான ஆடியோவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் 6 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதள பக்கங்களை கண்காணிக்கும் காவலர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தல், பெண்ணின் நாகரீகத்தை குலைக்கும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு உள்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது வரை அவதூறு பரப்பியவர்கள் யார் என்பது தெரியவில்லை. இருப்பினும் அந்த கருத்துகள் பதிவிடப்பட்ட வலைதள பக்கங்களின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் கைது செய்ய தீவிரமாக இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications