3 வயசு குழந்தைங்க.. தகப்பன் கண் முன்னாடியே பறி போன உயிர்.. கொடூர மாஞ்சா நூல்.. மக்கள் கடுங் கோபம்
Recommended Video
சென்னை: எங்கிருந்தோ இருந்து பறந்து வந்த மாஞ்சா நூல், கண்ணிமைக்கும் நேரத்தில் 3-வது குழந்தையின் கழுத்தை அறுத்து உயிரையே காவு வாங்கி விட்டது. இதனால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி விட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கோபால்.. இவரது 3 வயது மகன் அபினேஷ்வரன்.. கொருக்குப்பேட்டையில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு குழந்தையை அழைத்து சென்றிருந்தார் கோபால்.
பைக்கின் முன்னாடி பகுதியில் அவனை உட்கார வைத்து கொண்டு, திரும்பவும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பைக், கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகர் பாலத்தில் வந்துக் கொண்டிருந்தது.

அறுபட்டது
அந்த சமயத்தில், ஒரு பட்டம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.. வேகமாக பறந்து வந்து அதன் மாஞ்சா நூல் அபினேஷ்வரனின் கழுத்தில் நறுக்கென சிக்கியது. இதில், கழுத்து அறுத்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இதை பார்த்து பதறிய கோபால், பைக்கை நிறுத்திவிட்டு கதறினார்.

ரத்தம் வெளியேறியது
"என் மகனை காப்பாத்துங்க" என்று துடிதுடித்தார்.. சுற்றி இருந்த பொதுமக்களும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆர்கேநகர் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். போலீஸார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குழந்தைக்கு ரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டது. ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டான் என்று சொல்லி விட்டனர்.

அதிர்ச்சி
மாஞ்சா நூல் பட்டம் விடக்கூடாது என்று 2015-லேயே தடைச்சட்டம் சென்னையில் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் மாஞ்சா நூல் பட்டம் விற்பவர்கள், வாங்குபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்தனர். இடையில் மாஞ்சாநூல் பட்டமும் ஓரளவு கட்டுப்பட்டுதான் காணப்பட்டது. ஆனால், திடீரென திரும்பவும் முளைத்துள்ளது சென்னைவாசிகளை அதிர்ச்சி நிறைந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது. மாஞ்சா நூல் விற்பனையை சரியாக தடுக்கவில்லையோ என்ற கேள்வியையும் கோபத்துடன் எழுப்பி வருகிறது.

மக்கள் கோபம்
3 வயது குழந்தை பெற்ற தந்தை முன்பே கழுத்து அறுபட்டு துடிதுடித்து இறந்ததை யாராலுமே இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இந்த மாஞ்சாநூல் பட்டத்தை விட்டவர்கள் யார் என தெரியாததால், அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 20 மற்றும் 15 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications