அத்துமீறிய ஏபிவிபி.. இரும்பு கரம் நீட்டிய காவல்துறை .. தேசிய நிர்வாகி உட்பட 29 பேர் புழல் சிறையில்
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதிக்கேட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லம் முன்பு போராடிய பாஜகவின் மாணவர் பிரிவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதிக்கேட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லம் முன்பு போராடிய ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவினர் கைது செய்யப்பட்டனர். 29 பேரையும் 2022 பிப்ரவரி 28 வரை காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
அரியலூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும், கிறிஸ்தவ அமைப்புக்குச் சொந்தமான பள்ளியில் படித்து வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் செய்ய சொன்னதுதான் காரணம் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது. மேலும் மாணவியின் மரணத்திற்கு நீதிக்கேட்டு பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. பள்ளியின் வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
மதமாற்றம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது என குற்றச்சாட்டு கிளம்பியதால், தமிழகம் முழுக்க பரபரப்பு காணப்பட்டது. இதுதொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மாணவி தற்கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐயிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், விசாரணையில் தலையிடுவது முறையாகாது என்று கருத்து கூறியுள்ளது.

முதல்வர் வீடு முன்பு போராட்டம்
இந்தநிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை இல்லம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டம் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சாலையில் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்திய அனைவரையும் இழுத்துச்சென்று காவல்துறையினர் வேனில் ஏற்றினர்.

அண்ணாமலை ட்விட்டர் பதிவு
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, ஏபிவிபி தென் தமிழக தொண்டர்கள் தொண்டர்கள் செல்வி நிதி திரிபாதி, ஸ்ரீ எல்.முத்துராமலிங்கம், ஸ்ரீ ஹரி கிருஷ்ணா ஆகியோர் தலைமையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பாவி ஆன்மா மாணவிக்காக நீதி கேட்டு போராடும் அவர்களின் விடாமுயற்சியையும் உற்சாகத்தையும் பாராட்டத்தான் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்

29 பேர் சிறையில் அடைப்பு
இதனிடையே கைது செய்யப்பட்ட அனைவரையும் 18வது பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அந்த 32 பேரில் பாஜக மாணவர் அமைப்பின் தேசிய செயலாளர் நிதி திரிபாதியும் அடங்குவார். 29 பேரை 2022 பிப்ரவரி 28 வரை காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். 32 பேரில் 3 சிறார்களைத் தவிர 29 பேர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications