சிறையில் சிக்கிய நைஜீரிய மாணவர் சொந்த நாட்டுக்கு அனுப்ப உதவிய போலீஸ்.. பெருகும் பாராட்டுகள்
சென்னை: நைஜீரியாவில் இருந்து தமிழகத்திற்கு படிக்க வந்து வழக்கு ஒன்றில் சிக்கி கைதான இளைஞர் ஒருவரை அவரது சொந்த நாட்டுக்கு திரும்ப காவல்துறை ஆணையர் உதவி செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களுக்கு பின்னணியை விசாரித்துப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் நைஜீரியாவில் இருந்து இங்கு வரும் இளைஞர்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி தமிழகம் வருவோரின் பங்கு அதிகமிருக்கும்.

அந்த வகையில் பல நூதன பண மோசடிகள், கொள்ளையடிப்பு சம்பவங்கள், செயின் பறிப்பு சம்பவங்கள், கிரெடிட் கார்டு மோசடிகள் ஆகியவற்றில் பல நைஜீரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலை செய்வதற்காகவே அவர்கள் இங்கு வருகின்றனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்று சூடானை சேர்ந்த முகமது முஸ்தபா என்ற இளைஞர் டிப்ளமோ இன் பார்மசிஸ்ட் படிப்பு படிப்பதற்காக நாகப்பட்டினம் வந்துள்ளார். படிப்பை முடித்த பின்னர் அரியர் இருந்ததால் தமிழகத்திலேயே தங்கி சின்ன சின்ன வேலைகளை செய்து வந்துள்ளார். சென்னைக்கு சென்றால் அங்கு ஏதாவது வேலைகளை செய்துகொண்டே படிக்கலாம், அதோடு சூடானில் உள்ள தனது குடும்பத்தையும் காப்பாற்றலாம் என்று சென்னைக்கு வந்துள்ளார்.
அப்போது தங்குவதற்கு இடம் இல்லாததால் மெரீனா கடற்கரையில் தங்கியுள்ளார். இப்படி தங்கும்போது ஒருநாள் மெரீனா கடற்கரையில் நடைபெற்ற அடிதடியில் இவரும் கலந்து கொண்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார். இதனால் கைது செய்யப்பட்டு 4 மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
சிறைத் தண்டனை முடித்து வெளியே வந்தவர் மீண்டும் கிடைத்த வேலைகளை செய்து வந்ததோடு, சென்னையில் உள்ள மசூதிகளிலும் சின்ன சின்ன வேலைகளை செய்து வந்துள்ளார். பகல் வேளைகளில் இப்படி வேலை செய்து வந்த முஸ்தபா இரவு நேரத்தில் உறங்குவதற்காக மீண்டும் மெரீனா கடற்கரைக்கே வந்துள்ளார். அப்போது ரோந்து வந்த மெரீனா கடற்கரை போலீசார் இவரை பிடித்து விசாரித்தபோது இவர் ஏற்கனவே சிறைக்கு சென்று வந்த விவரம் தெரிந்துள்ளது. எனவே மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சூடான் மாணவர் முகமது முஸ்தபா குறித்த விவரம் சென்னை காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதனுக்கு கூறப்பட்டுள்ளது. அப்போது அவர் அந்த மாணவனை மீண்டும் சூடானுக்கு அனுப்ப வேண்டிய உதவிகளை செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து முஸ்தபாவுக்கு வேண்டிய உதவிகளை செய்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றி சூடானுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய மெரீனா காவல்துறை ஆய்வாளர் ஜெயராஜ், முஸ்தபா என்ற சூடான் மாணவன் பார்மசி படிப்பு படிப்பதற்காக இங்கு வந்துள்ளார். அப்போது இங்குள்ள இளைஞர்களுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது இதில் அவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் சிறையில் இருந்து திரும்பிய பின்னர் அவர் மீண்டும் சாப்பிட வழியில்லாததால் கிடைத்த வேலைகளை செய்வது அல்லது பிச்சை எடுப்பது என்று காலத்தை கடத்தி வந்துள்ளார். இந்த தகவல் மீண்டும் ரோந்து சென்ற போலீசார் மூலம் கிடைத்தவுடன் காவல்துறை ஆணையர் விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர் இந்த மாணவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.
முஸ்தபாவின் விசா ஏற்கனவே காலாவதி ஆகிவிட்டதால் அவர் இந்திய அரசுக்கு அபராதமாக ரூ. 20 ஆயிரம் கட்ட வேண்டி இருந்தது. ஆகவே அந்த துறை அதிகாரிகளிடம் பேசி இந்த கட்டணத்தை குறைக்க வழி செய்தோம் பின்னர் அவர் தனது நாட்டுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்றால் அதற்கு விமான கட்டணமாக ரூ.40 ஆயிரம் தேவை என்ற நிலை இருந்தது. அதற்காக ஒரு ஸ்பான்சரை அணுகி அதையும் பெற்றோம்.
அதன் பின்னர் அவரை இன்று விமானத்தில் ஏற்றி சூடான் நாட்டுக்கு அனுப்பி வைத்தோம் என்றார். சிறைக்கு சென்று வந்த அந்த மாணவர் மீண்டும் இங்கேயே இருந்தால் மேலும் சிறிய சிறிய குற்றங்களை செய்து மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடும். அல்லது வேண்டாத தொடர்புகள் மூலம் சமூக விரோதியாக மாறவும் கூடும் என்பதால் அவரை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்ப காவல் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இன்று அவர் அனுப்பி வைக்கப்பட்டார் என்று மன நிறைவோடு கூறினார் ஆய்வாளர் ஜெயராஜ். காக்கி சட்டைக்குள் இருந்து கொண்டு கடுமையாக நடந்து கொள்ளும் காவல்துறையினர் கனிவோடும் நடப்பது பெரும் வரவேற்ப்புக்கு உரியதே. தானாக முன்வந்து அந்த மாணவருக்கு உதவி செய்த காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், மற்றும் அதிகாரிகள் உண்மையில் பாராட்டுக்குரியவர்களே .












Click it and Unblock the Notifications