எல்லா பக்கமும் நாய்க்கடி சம்பவங்கள்.. நாய் வளர்ப்பவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அட்வைஸ்
சென்னை: சென்னையில் நாய் கடித்து மக்கள் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நாய் வளர்ப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அட்வைஸ் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த மே 5ஆம் தேதி இரண்டு நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்தது.

தொடர்ந்து, இன்று சென்னை சூளைமேட்டில் பெண் ஒருவரை நாய் கடித்த நிலையில் காப்பாற்ற வந்த அவரது கணவரையும் நாய் கடித்துள்ளது. நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் நாய் வளர்ப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அட்வைஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் 2 ராட்வெய்லர் நாய்கள் கடித்து குதறி படுகாயம் அடைந்த குழந்தையை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கான செலவு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
மதுரைக்கு அப்புறப்படுத்தப்பட்ட ராட்வீலர் நாய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது தேசிய அளவிலான பிரச்சினை. இதற்கு தேசிய அளவிலான விவாதம் தேவை.
குறிப்பிட்ட சில நாய் இனங்களை இறக்குமதி செய்ய, விற்பனை செய்ய, இனப்பெருக்கம் செய்ய டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. டெல்லி உயர்நீதிமன்ற தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளன. நாய் உள்ளிட்ட எந்தவொரு விலங்குகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் எங்களுக்கு கிடையாது. நாய் கடித்தால் அதன் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications