நாளை நள்ளிரவுக்குள்.. சொத்துவரியைக் கட்டாவிட்டால்.. 2% அபராதம்.. ரஜினிக்கு மாநகராட்சி வார்னிங்!
நாளை இரவு 12 மணிக்குள் ரூ.6.5 லட்சம் சொத்து வரியை ரஜினி கட்ட தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை: ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ரூ. 6.5 லட்சம் சொத்து வரியை அக்டோபர் 15ம் தேதி இரவு 12 மணிக்குள் ரஜினிகாந்த் கட்ட தவறினால் 2 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்துமாறு, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகேந்திர திருமண மண்டபத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் சொத்து வரி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரானா தொற்று காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் தன்னுடைய ராகவேந்திர திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைப்பெறாத நிலையில் அதன் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர்10ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் வைத்து சொத்துவரிக்கு விலக்கு அளிக்க வேண்டும், அபராதமோ, வட்டியோ விதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று ரஜினிகாந்த் மனுவில் தெரிவித்திருந்தார்.
சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென என ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23ஆம் தேதி கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29 -ம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதா ? என கேள்வி எழுப்பினார்.
மேலும், மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும் என்றும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா என சரமாரி கேள்வி எழுப்பினார். இதனால், இந்த மனுவை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், நாளை அக்டோபர் 15ஆம் தேதி இரவு 12 மணிக்குள் ரூ.6.5 லட்சம் வரியை ரஜினி கட்ட தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராகவேந்திரா திருமண மண்டப விவகாரத்தில் ரஜினியை ஹைகோர்ட் ஒரு பக்கம் எச்சரித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சி கெடு விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications