பரபரப்பு இல்லாத அமைச்சர்கள் அறைகளும் -இல்லங்களும்! எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மை! பின்னணி என்ன?
சென்னை: கட்சிக்காரர்கள் -பொதுமக்கள் என ஜே.ஜே.வென கூட்டம் கட்டி ஏற வேண்டிய அமைச்சர்கள் அறைகளும், அவர்களது இல்லங்களும் ஆள் அரவமின்றி நிசப்தமாக இருப்பதை காண முடிகிறது.
இதற்கு காரணம் டிரான்ஸ்ஃபர், டெண்டர், அப்பாயின்மெண்ட் என எதிலும் அமைச்சர்கள் முன்பை போல் தலையிட முடியாததும் அவற்றின் மீது முடிவெடுக்க முடியாததும் தான்.
அதிமுக ஆட்சியின் போது தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களின் அறைகளிலும் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவர்களது இல்லங்களிலும் திருவிழாவை போல் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அமைச்சர்கள் இல்லங்கள்
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறைகள் முன்பாக கட்சியினரும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டு அவரவர் கோரிக்கைகளையும், குறைகளையும் சொல்வதற்காக காத்திருப்பார்கள். இதனால் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அவர்களது அறைகளில் இருக்கும் போது, கூட்டம் ஜே.ஜே.வென இருக்கும். இதேபோல் அமைச்சர்கள் இல்லம் அமைந்துள்ள பசுமை வழிச்சாலையிலும் கட்சிக்காரர்களை சாரை சாரையாக பார்க்க முடியும்.

காரியம் சாதிக்க
காரியம் நடக்கிறதோ இல்லையோ அமைச்சரை பார்க்க சென்னைக்கு போகிறேன் என ஊருக்குள் பெருமையாக சொல்லிவிட்டு தலைநகருக்கு படையெடுப்பது ஆளும் கட்சியினரின் வழக்கமான நடவடிக்கையாகும். அது அதிமுகவோ, திமுகவோ தமிழகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி இருக்கிறதோ அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் இப்படி ஒரு டூரை அடித்து சென்னையில் அமைச்சர்களை பார்த்து காரியம் சாதிக்க தவம் கிடப்பார்கள்.

அமைச்சர்கள் அறைகள்
ஆனால் அண்மைக்காலமாக இந்தக் காட்சிகள் எல்லாம் மிஸ்ஸிங். அமைச்சர்களை பார்க்கவோ அவர்களிடம் கோரிக்கைகளை குறைகளை கூறவோ கட்சிக்காரர்கள் மத்தியிலே ஆர்வம் குறைந்திருப்பதை உணர முடிகிறது. காரணம் டிரான்ஸ்ஃபர், டெண்டர், அப்பாயின்மெண்ட் என எதிலும் முந்தைய கால கட்டத்தில் எடுத்த நடவடிக்கைகளை போல் இப்போது செய்ய இயாலாதது தான். அதிமுக ஆட்சியின் போது அமைச்சர்கள் இல்லங்களிலும் அவர்களது தலைமைச் செயலக அறைகளிலும் நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 கட்சிக்காரர்களாவது கையில் ஃபைலுடன் நின்று கொண்டிருப்பார்கள்.

டி.என்.பி.எஸ்.சி
அரசுப் பணிகளில் நேரடி நியமனம் செய்யப்பட்ட இடங்களிலெல்லாம், இப்போது டி.என்.பி.எஸ்.சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. யாரும் தனது தலைமையிலான அரசையோ, அமைச்சர்களையோ கை நீட்டி குற்றஞ்சுமத்தி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதனால் தான் எல்லாம் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக நிற்கிறார்.












Click it and Unblock the Notifications