அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜியின் முன்ஜாமீன் மனு முடித்து வைப்பு
சென்னை: முன் ஜாமீன் கோரி இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்புவதாகக் கூறி, நக்கீரன் பத்திரிகையை கண்டித்து கோவையில் கடந்த 27 ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரான ஓம்கார் பாலாஜி, நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக, அப்துல் ஜலீல் என்பவர் அளித்த புகாரில் ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரிய ஓம்கார் பாலாஜி, நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் கடந்த வாரம் ஆஜரானார்.
அப்போது, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க விருப்பம் இல்லை என தெரிவித்ததை அடுத்து, அவரை கைது செய்ய தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து அன்றைய தினம் உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஓம்கார் பாலாஜியின் முன் ஜாமீன் மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, கடந்த 13ம் தேதி ஓம்கர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் உள்ளதால், இந்த மனு செல்லாததாகி விட்டது என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, முன் ஜாமீன் கோரி ஓம்கர் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications