வாடகை வீடுதாரரிடம் மோதல்! நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்
சென்னை: வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதற்காக நடிகர் தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டதை அடுத்து, வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை போயஸ் தோட்டத்தில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 2022ம் ஆண்டு முதல் அஜய் குமார் லுனாவத் என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்களது வீட்டுக்கு வந்த நபர்கள் வீட்டை நடிகர் தனுஷ் வாங்கியுள்ளதால் உடனடியாக காலி செய்ய கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஜய் குமார் லுனாவத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், 2024 ஜனவரி வரை ஒப்பந்தம் இருந்த நிலையில், காலி செய்ய மறுத்ததால் வீட்டின் மின் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், முறையாக வாடகை செலுத்தி வந்த நிலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி காலி செய்ய சொன்னது சட்ட விரோதம் என்பதால் வீட்டு விவகாரத்தில் தலையிட நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, தனுஷ் காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், மனுதாரருக்கும், தங்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாகவும், கடந்த 31ம் தேதி வீட்டின் சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடிகர் தனுஷ்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications