"மெட்ரிக்குலேஷனை" நீக்கிவிட்டு தனியார் பள்ளிகள் என பெயர் மாற்றம்! கோர்ட்டுக்கு வந்த பஞ்சாயத்து!
சென்னை: மெட்ரிக்குலேஷன் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் பெயரில் உள்ள மெட்ரிக்குலேஷன் என்ற வார்த்தையை நீக்கி, தனியார் பள்ளி என பெயர் வைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கானது தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது. மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக கல்வியாளர்களும் தமிழக அரசும்தான் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications