ராகிங் கொடுமை.. 90களில் நாட்டையே உலுக்கிய நாவரசு கொலை வழக்கு.. ஜான் டேவிட்டுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ஜான் டேவிட் முன்கூட்டி விடுதலை கோரிய விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க.பொன்னுசாமியின் மகன் நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார். கடந்த 1996ம் ஆண்டு ராகிங் கொடுமையால் அவர் கொல்லப்பட்டார். பிரசாந்த் நடித்த கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தில் கூட, கரணிடம் பிரசாந்த் பேசும் காட்சியில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டுச் சொல்லியிருப்பார். அக்கால கட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது இந்த கொடுமையான சம்பவம்.

தமிழகம் முழுவதும் மட்டுமின்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சீனியர் மாணவரான ஜான் டேவிட்-டுக்கு, கடலூர் சிறப்பு நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த போதும், உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதையடுத்து கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்த ஜான் டேவிட், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி அவரின் தாயார் எஸ்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு, ஜான் டேவிட் முன்கூட்டி விடுதலை செய்வதற்கு மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், திட்டமிட்டு கொடூரமான முறையில் மருத்துவ மாணவரை கொலை செய்துள்ளதால் ஜான் டேவிட்டை விட்டு முன்கூட்டி விடுதலை செய்ய முடியாது ஆளுநர் மறுப்பு தெரிவித்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்பதால் ஜான் டேவிட் முன்கூட்டி விடுதலை குறித்து மீண்டும் பரிசீலிக்கும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை ஜான் டேவிட்டுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications