அதிமுக ஆட்சியில் தகுதியில்லாதவர்களுக்கு கலைமாமணி விருதுகளா.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
சென்னை: 2019-2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாடு இயல், இசை , நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி, 19 வயது முதல் 35 வரை உள்ளவர்களுக்கு கலை வளர்மதி, 36 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு கலை சுடர்மணி, 51 வயது முதல் 60 வயது வரை கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருதுகள் வழங்கப்படுகின்றன.
கலைமாமணி விருதுகளுக்கு வயது வரம்பும் தகுதியும் வகுக்கப்படவில்லை. சென்னையில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது கடந்த 2021 ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வழங்கப்பட்டது. இதில் தகுதியில்லாத நபர்களளுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் மற்றும் தலைவரின் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தகுதியில்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெறக் கோரி தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. மதுரை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்.. தமிழ்நாடு அரசு அதிரடி
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர் மகாதேவன், ஜெ சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். இது தொடர்பாக தமிழக அரசு சார்பாக கடந்த ஆட்சியின் போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளில் ஏதேனும் முறைகேடு உள்ளதா என்பது குறித்து தற்போது கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது 2019- 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.