நாய் ஆடு ஆனது எப்படி.. ஏன் அவசரமாக புதைத்தீர்கள்.. நீதிபதிகள் சரமாரி கேள்வி
நாய்க்கறி புதைத்தது தொடர்பாக விளக்கம் தேவை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை: "நாய் எப்படி ஆடு ஆனது? ஏன் அவசர அவசரமாக புதைக்கப்பட்டது" என்று நீதிபதிகள் மாநகராட்சிக்கு சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.
எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நாய்க்கறி என்று கூறி 2,100 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிறகு அதில் பெரும்பாலானவற்றை பினாயில் ஊற்றி அழித்துவிட்டனர். மீதி இறைச்சி ஆய்வுக்காக கொண்டு போகப்பட்டது.
ஆய்வு முடிவு வருவதற்குள்ளேயே சென்னை ஹோட்டல்களில் நாய்க்கறி என்ற விஷயம் பெரும் பரபரப்பாகி விட்டது. பிறகு 6 நாள் கழித்து வந்த ஆய்வு முடிவில், அது நாய்க்கறி இல்லை, ஆட்டுக்கறிதான் என்று தெரியவந்தது.
தனி ஆணையர்
இந்நிலையில், இதுகுறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "இறைச்சி குறித்த ஆய்வு அறிக்கையை உணவுத் துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் இறைச்சியை ஆய்வு செய்ய தனி ஆணையரை நியமிக்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாற்றம் எடுத்தது
இந்த மனுவினை ஐகோர்ட் நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அரசுத் தரப்பு வக்கீல் இது பற்றி சொல்லும்போது, "பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றாலும், அது சுகாதாரமற்ற முறையில் இருந்தது. அதிக நாற்றமெடுத்தது. அதனால்தான் அதை மாநகராட்சி அழித்துவிட்டது என்று கூறினார்.
ஏன் அவசரமாக புதைத்தீர்கள்?
இதைக் கேட்ட நீதிபதிகள், "முதலில் இதனை நாய்க்கறி என்று கூறிய அதிகாரிகள் பின்னர் எதற்காக அதனை ஆட்டுக்கறி என்று சொன்னார்கள்? அவசரம் அவசரமாக அந்த இறைச்சியை புதைக்க வேண்டிய அவசியம் என்ன? எந்த விதியின் கீழ் இறைச்சி அழிக்கப்பட்டது? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
விளக்கம் வேண்டும்
மேலும் இறைச்சி அழிக்கப்பட்டது சம்பந்தமாக வரும் 6-ந் தேதிக்குள் விளக்கமான அறிக்கையும் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.