வந்தாச்சு தீபாவளி! சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள்! சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கம் அளித்த மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய தனி இடம் ஒதுக்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சென்னையில் பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு, என்.எஸ்.சி.போஸ் சாலை உள்பட ஏழு இடங்களில் பட்டாசு கடைகள் நடத்தியவர்களுக்கு தீவுத்திடலில் கடைகள் ஒதுக்கும் போது சலுகைகள் வழங்க 2006 ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், டெண்டர் மூலம் கடைகள் ஒதுக்கப்படுவதாகவும், இதில் தகுதியில்லாத புதியவர்கள் ஒதுக்கீடு பெறுவதால், சென்னையில் ஏழு தெருக்களில் பட்டாசு விற்பனை செய்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்க உறுப்பினர்களுக்கு தீவுத்திடலில் தனி இடம் ஒதுக்க வேண்டும் அல்லது வேறு இடத்தை ஒதுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்டில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு விண்ணப்பித்ததாகவும், அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
தங்கள் விண்ணப்பம் மீது முடிவெடுக்கும் வரை, நடப்பாண்டு கடைகள் ஒதுக்குவது தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுதாரர் சங்கம் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications