மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலாதேவியை நினைவிருக்கா? குற்றபத்திரிகை நகல் கேட்ட கோர்ட்!
சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். சந்தானம் குழு அளித்த அறிக்கையை வெளியிட தடைவிதித்து இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதிபரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டதா என்றும், பேராசிரியைக்கு எதிராக மதுரை காமராஜர் பல்கலைகழகம் என்ன நடவடிக்கை எடுத்தது, குற்ற வழக்கின் விசாரணை நிலை என்ன, 5 ஆண்டுகளாக இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசு தரப்பில் நிர்மலாதேவி 2018-ஆம் ஆண்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், சாட்சி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றப்பத்திரிகையின் நகலை தாக்கல் செய்ய அரசுக்கு தரப்பிற்கும், பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக எடுக்கபட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மதுரை காமராஜர் பல்கலைகழக தரப்பிற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications