சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திருவாரூரில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட தில்லைவிளாகம், உதயமார்த்தாண்டபுரம், தொண்டியக்காடு போன்ற கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற கோரி, தில்லைவிளாகம் கிராம பஞ்சாயத்து தலைவர் யோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இறால் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களால், கிராமங்களில் உள்ள நீர் நிலைகள் பாதிக்கப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, இந்த பகுதிகளை ஆய்வு செய்து, பதிவு செய்யப்படாமல் செயல்படும் இறால் பண்ணைகளை கண்டறிந்து அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிம நிபந்தனைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டால், அந்த உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பரிந்துரைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை 12 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications