முதல்வர் ஒப்புதல் அளித்த பிறகும் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? சென்னை ஐகோர்ட் கேள்வி!
சென்னை: ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அளவிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும், தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாளையங்கோட்டை சிறையில் உள்ள சங்கர், கோவை சிறையில் உள்ள வேலுமணி உள்ளிட்ட பத்து ஆயுள் தண்டனைக் கைதிகள் சார்பில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கி, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியதாகவும், ஆனால் ஆளுநர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின்பும் தகுந்த காரணங்களை கூறாமல் தமிழக ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், மீண்டும் இந்த கோப்புகளை தமிழ்நாடு அரசு எட்டு வாரத்திற்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு 10 ஆயுள் தண்டனை கைதிகள் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications