நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை ஹைகோர்ட் இன்று தீர்ப்பு!
சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி உறுப்பினர்கள் ஏழுமலை உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கிடையில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த அனைத்து வழக்குகளிலும் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் தீர்ப்புக்காக வழக்குப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications