அதிமுக பொதுக்குழு வழக்கு.. விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு.. சொன்ன காரணம் இதுதான்!
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதிமுக பொதுக்குழு தொடர்பான இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ், ஜூலை 1ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாகவும், பொதுக்குழு சட்டப்படி தான் கூட்டப்பட்டது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இதன் மேல்முறையீட்டில் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications