யூடியூப் சேனல்களை கண்ட்ரோல் பண்ணனும்.. வழக்கில் மத்திய அரசுக்கு உத்தரவு போட்ட சென்னை ஐகோர்ட்!
சென்னை: யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் போலீசாரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழ்க்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், யூடியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, யூடியூப் நிறுவனத்தையும், மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.












Click it and Unblock the Notifications