EVM ஓட்டுகளை VVPAT ஸ்லிப் உடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி வழக்கு: விசாரிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை, ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, ஒப்புகைச் சீட்டு இயந்திரம் எனும் விவிபேட் (VVPAT) இயந்திரத்தில் விழும் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதை கட்டாயமாக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கமிலஸ் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு, இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தது.
மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் அல்லது மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும்போது வாக்காளருக்கு விவிபாட் இயந்திரம் மூலம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்றால், மனித தவறுகள், பாரபட்சம் நடக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு எண்ணுவது சாத்தியமற்றது. மனித தலையீடு இல்லாத இயந்திரம் சரியான முடிவுகளை கொடுக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications