அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு! மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த பிறகு, அவரது தோழியான வி.கே.சசிகலாவை இடைக்கால பொதுச் செயலாளராகவும், டிடிவி.தினகரனை துணை பொதுச் செயலாளராகவும் அதிமுகவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2017ல் நடந்த பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வழக்கு: அதன்பின்னர் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றனர். இந்த நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய தீர்மானத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உரிமையியல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது.
வாதங்கள்: அப்போது சசிகலா தரப்பில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை அந்த கூட்டத்தில் அவர்களாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதாக வாதிடப்பட்டது. முதல்வராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தபோது கூட எந்தவிதமான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராகத் தான் உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், "விதிகளின் படி நடைபெற்ற பொதுக்குழு என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதாகவும், எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் சசிகலா மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
அதேபோல ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக தானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையே தற்போது வரை நீடிப்பதாகவும், இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவை நீக்கியது செல்லும் எனவும் வாதிடப்பட்டது.
தள்ளுபடி: அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளிக்க இருந்தது. இருப்பினும், நேற்று மழை காரணமாக நீதிமன்றம் செயல்படாத நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக சசிகலா மேல்முறையீட்டு மனுவைச் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications