அதிமுக வழக்கு.. வேகப்படுத்தும் எடப்பாடி.. தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னம், உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த அதிகார வரம்பு உள்ளதா என்பது தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து ஏழு வாரங்கள் கடந்த பின்னும், அதிகாரவரம்பு குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை எனக் கூறி, இந்த ஆரம்பகட்ட விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் இருப்பது தேவையில்லாத தவறான தகவல்களை பரப்ப வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தேர்தல் நெருங்க உள்ள நிலையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications