மாம்பழம் சின்னம்.. தேர்தல் ஆணையம் 3 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து, ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் 3 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர் நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளனர்.

பாமக பனிப்போர்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக கூட்டணியில் முட்டுக்கட்டை போட்டுவிட்டனர். அவர் திமுக அல்லது தவெகவுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராமதாஸ் தரப்பிலான பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளனர். அன்புமணி தரப்பிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டார். ராமதாஸ் திமுக அல்லது தவெகவுடன் இணைவார் என்று கூறப்பட்டது.
ஆனால் கடந்த சில நாட்களாக ராமதாஸ் திமுகவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராமதாஸ் அணியில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. மறுபக்கம் பாமகவில் தந்தை, மகன் அதிகார போட்டியும் உச்சத்தில் உள்ளது. கட்சிக்கு உரிமை கோரி ராமதாஸ், அன்புமணி இருவரும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மாம்பழம் சின்னம் வழக்கு
தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு பாமகவின் மாம்பழம் சின்னம் ஒதுக்கி ஆணை கடிதம் அனுப்பியது. இதற்கு எதிராக ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "போலி ஆவணங்களை சமர்ப்பித்து தேர்தல் ஆணையத்தை குழப்பியுள்ளனர். அன்புமணியின் பதவிக்காலம் 2025 மே மாதத்துடன் நிறைவடைந்துவிட்டது. அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கட்சி தலைவர் என்கிற அடிப்படையில் என் முகவரிக்கு கடிதம் வழங்க சொல்லி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அன்புமணிக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதின்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் வாதிட அண்புமணி தரப்பு முயற்சி செய்த நிலையில், எதிர்தரப்பினராக இல்லாதபோது வாதிட முடியாது என தெரிவித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி மறுத்தனர்.












Click it and Unblock the Notifications