நீதிமன்ற அவமதிப்பு! செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்ட்! சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதை செயல்படுத்தாமல் அலட்சியப்படுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா ஆனைகுன்றத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்தவர் முனுசாமி. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி முனுசாமி இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவருடைய மகன் ராஜகிரி என்பவர் கருணை அடிப்படையில் வாரிசு வேலை கோரி விண்ணப்பித்திருந்தார்.

2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை கருணை அடிப்படையில் வேலை கோர தடை இருந்தது. இந்த தடை 2006-ஆம் ஆண்டே நீங்கியது. இதையடுத்து ராஜகிரி மீண்டும் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த மனு காலதாமதமாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பம் அளித்த ராஜகிரி வறுமைக் கோட்டுக்கு கீழ் இல்லை என்றும் கூறி அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகிரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளதாகவும் அவருடைய ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரம் என்றும் மதுராந்தகம் துணை வட்டாட்சியர் சான்றிதழ் அளித்துள்ளார்.
எனவே மனுதாரருக்கு 3 மாதங்களுக்குள் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை செங்கல்பட்டு ஆட்சியர் அமல்படுத்தவில்லை என தெரிகிறது.
இதையடுத்து ராஜகிரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக கடந்த பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பி. சுடலையாண்டி, "பணி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஒன்றரை ஆண்டுகளாகியும் அவர் அமல்படுத்தவில்லை" என வாதிட்டார்.
அப்போது நீதிபதி, இந்த வழக்கை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார். அதற்குள் நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தாவிட்டால் அவர் ஆஜராக வேண்டியதில்லை. இல்லாவிட்டால் அவர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் ஆஜராகவில்லை, மார்ச் 21 ஆம் தேதிக்குள்ளும் உயர்நீதிமன்ற உத்தரவை ஆட்சியர் அமல்படுத்தவில்லை என மனுதாரர் தெரிவித்தார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரக் கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications