தமிழ்நாட்டிலும் ஹிஜாப் தடைகோரி வழக்கு... விசாரணைக்கே ஏற்காத உயர்நீதிமன்றம் - கடைசியில் தள்ளுபடி
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை விதிக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பூரை சேர்ந்தவர் கோபிநாத். வழக்கறிஞரான இவர் இந்து முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில், இவர் கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த ஆடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

ஹிஜாப் அணிகின்றனர்
அந்த மனுவில், "பள்ளி மாணவர்களிடம் வேறுபாட்டை களையும் நோக்கில் கடந்த 1960 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். இது சம்பந்தமான விதிகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை எனவும், ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை மாணவ - மாணவிகள் அணிந்து வருகின்றனர்." எனவும் தெரிவித்தார்.

கர்நாடகா போல் தமிழ்நாட்டில் பிரச்சனை வரக்கூடாது
இது சீருடை விதிகளுக்கு எதிரானது என மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், மதத்தின் பெயரால் சமத்துவமின்மை ஏற்படுவதை தடுக்கவும், கர்நாடகாவில் ஏற்பட்ட ஹிஜாப் பிரச்சனை போல தமிழகத்தில் நிகழாமல் தடுக்கவும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளேன்." என்று அவர் கூறினார்.

மத அடையாளங்களுக்கு தடை வேண்டும்
நாகரிக சமுதாயமான இந்திய சமுதாயத்தில் மதத்தின் பெயரால் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்பதால், தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகள் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும்." எனவும் அவர் தனது மனுவில் கோரி இருந்தார்..

மனுதாரர் தரப்பு வாதம்
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி நிறுவனங்களில் ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக மட்டுமல்லாமல் பொதுவாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கு தள்ளுபடி
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எப்படி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications