சென்னைல ரோட்டில் காரை நிறுத்துனா தண்டம்.. ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவா? வருகிறது ஸ்மார்ட் பார்க்கிங்!
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் சாலையோர பார்க்கிங்கால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் முதல் சென்னை அண்ணா நகரில் 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சற்று ஏறக்குறைய இரண்டு கோடி மக்கள் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான கார்கள், பைக் போன்ற சொந்த வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை அரசு பேருந்து, மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை என பொதுப் போக்குவரத்து இருக்கிறது. ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வசதிக்காக கார் மற்றும் பைக் ஆகிய வாகனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் சென்னையில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே கார்கள் தான்.

கடந்த 2022 ஆம் ஆண்டு வரை சென்னையில் சுமார் 90 லட்சம் கார்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 2025 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சத்தை கடந்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம்.
ஆனால் சென்னையை பொருத்தவரை கார் பார்க்கிங் தான் பெரிய பிரச்சனையே. பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட்களில் கார் பார்க்கிங் இருந்தாலும் சிறிய சிறிய வீடுகளில் வசிப்போர் கார்களை சாலை ஓரங்களிலும் தெருகளிலும் நிறுத்தும் நிலை தான் இருக்கிறது. இதனால் அருகில் வசிப்பவருக்கு இடையூறு ஏற்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
மேலும் இரவு நேரங்களில் சிலர் அந்த கார்களை அடித்து உடைத்து சேதப்படுத்துவதும், துப்புரவு பணி, சாலை அமைக்கும் பணி போன்றவற்றின் போது கார்களால் இடையூறு ஏற்படுவதும் வாடிக்கையாக வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக செப்டம்பர் மாதம் முதல் சென்னை அண்ணாநகரில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வாகனத்திற்கு 60 ரூபாயும், கார்களுக்கு 40 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும் பார்க்கிங் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்ணாநகரின் முக்கிய சாலைகள் மட்டுமல்ல அது குடியிருப்புச் சாலைகளிலும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டிருக்கிறது. அண்ணா நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் பார்க்கிங் இல்லாத நிலையில் வீட்டின் முன் சாலையில் காரை நிறுத்த கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போன் செயலி மூலம் பார்க்கிங்க்கான இடத்தை முன்கூட்டியே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் யூபிஐ, ரொக்க பரிவர்த்தனை முறையில் கட்டணம் செலுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சென்னை மாநகராட்சி உடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் ஸ்மார்ட் பார்க்கிங் குறித்து கண்காணிப்பதற்காக சுமார் 100 ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அதிநவீன கண்காணிப்பு கேமராக்களுடன் இவர்கள் இரண்டு ஷிப்டுகளாக பணியாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் அண்ணா நகரில் விரைவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications