4 பகுதிகளாக சென்னையைப் பிரித்து.. ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு நிறம்.. உங்க பகுதி எந்த கலர் தெரியுமா?
சென்னை: கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் சென்னையில் உள்ள மண்டலங்கள் சிவப்பு, ஆரஞ்சு, இளம் ஆரஞ்சு, பச்சை ஆகிய 4 வண்ணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 170 மாவட்டங்களை சிகப்பு மண்டலங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. அது போல் தமிழகத்தில் 22 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட்டாக அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும்.
214 பேர்
இந்த நிலையில் சென்னையில் நேற்று வரை மொத்தம் 214 கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்தது. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த 7 பேர் பலியான நிலையில் 20 பேர் குணமடைந்துள்ளனர்.
சிவப்பு நிறம்
அதுபோல் சென்னையிலும் 4 வண்ணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, இளம் ஆரஞ்சு, பச்சை ஆகிய 4 வண்ணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 64 பேர் பாதித்துள்ள ராயபுரம் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரஞ்சு நிறம்
அதன்பிறகு 31 பேர் பாதித்துள்ள திருவிக நகர், 24 பேர் பாதித்த கோடம்பாக்கம், 22 பேர் பாதித்துள்ள அண்ணாநகர், 20 பேர் பாதித்த தண்டையார்பேட்டை, 18 பேர் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்கள் ஆரஞ்சு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பச்சை நிறம்
7 பேர் பாதித்துள்ள பெருங்குடி, அடையாறு, 5 பேர் பாதித்துள்ள வளசரவாக்கம், 4 பேர் திருவொற்றியூர், 3 பேர் பாதித்துள்ள மாதவரம், ஆலந்தூர், 2 பேர் பாதித்துள்ள சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் இளம் ஆரஞ்சு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்படாத மணலி, அம்பத்தூர் ஆகிய மண்டலங்கள் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்
உயிரிழந்தவர்கள் ராயபுரத்தில் 5 பேரும் திருவிக 1 நபரும் தண்டையார்பேட்டையில் 1 நபரும் உள்ளனர். குணம் அடைந்தவர்கள் ராயபுரத்தில் 1 நபரும், கோடம்பாக்கத்தில் 5 பேரும், அண்ணாநகரில் 7 பேரும் தேனாம்பேட்டையில் 3 நபரும், வளசரவாக்கத்தில் 2 பேரும், அடையாறில் ஒருவரும் ஆலந்தூரில் ஒருவரும் ஆவர்.