கோயம்பேட்டில் உருண்ட ரோடு ரோலர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்! உயிர் இப்படியா போகணும்?
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே ரோடு ரோலரில் சிக்கி மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கவன குறைவாக வாகனத்தை இயக்கியதாக ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கோயம்பேட்டில் சாலைப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ரோடு ரோலரால் நசுக்கப்பட்டு 54 வயது நபர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை வடக்கு மாட வீதியில் நிகழ்ந்தது. இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர் பாஸ்கர் (54) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். ரோடு ரோலரின் ஓட்டுநர், தனது கவனக்குறைவால், சில அடி தூரத்தில் நின்ற பாஸ்கர் மீது வாகனத்தை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அங்கிருந்தவர்களும், பிற ஊழியர்களும் உடனடியாக பாஸ்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர், மேற்பார்வையாளர் மற்றும் ரோடு ரோலர் ஓட்டுநர் மோகன் மீது நடவடிக்கை எடுக்க பாஸ்கரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில், பணிகள் மேற்பார்வையில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் 127-வது கோட்டத்தின் உதவிப் பொறியாளர் வீரராகவன் மீதும் மாநகராட்சி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோடு ரோலர்கள் குறைந்தது 10-20 டன் அளவுக்கு எடை இருக்கும். அது உடலின் மீது ஏறுகிறது எனில், உடனடியாக உடலில் உள்ள எலும்புகள் சடசடவென உடைய தொடங்கிவிடும். கால் எலும்பு, இடுப்பு எலும்பு, முதுகு தண்டு, மார்பு எலும்பு என இறுதியாக மண்டை ஓடு எலும்பு என அனைத்தும் நொறுங்கிவிடும். இதனால் உடனடியாக மரணம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மரணத்திற்கு எலும்புகள் உடைவது மட்டுமே காரணம் கிடையாது.
அதிக அழுத்தம் காரணமாக இதயமும், நுரையீரலும் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். இறுதியாக மூளைக்கு ரத்தம் போவது நின்று போய் மரணம் ஏற்படும். இதுபோன்ற விபத்துகளில், பாதிக்கப்படும் வலியை உணர்வதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிடுவார்.
இவ்வளவு கொடூரமான விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்தவரின் உறவினர்கள் வலியுறத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications