சென்னை கட்டட விபத்து..மீட்புப்பணி தீவிரம்..சிக்கியவர்களை உயிரோடு மீட்போம்..ககன் தீப் சிங் பேடி உறுதி
சென்னை: மண்ணடியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சென்னை மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினரை வரவழைத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை விரைவில் உயிரோடு மீட்க நடவடிக்கை எடுப்போம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

சென்னை பாரிமுனையில் அரண்மனை 4வது தெருவில் 4 மாடி கட்டடம் ஒன்று புதுப்பித்தல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வண்டிகளில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டட இடிபாடுகள் 5 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி கட்டட விபத்து நடந்த இடத்தைச் சுற்றி இருக்கும் பொது மக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கட்டட விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்து சென்னை மேயர், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் மேற்பார்வையிட்டனர். கட்டடம் இடிந்த இடம் குறுகிய பகுதி என்பதால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிரோடு மீட்க முயற்சி செய்வதாக ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். எத்தனை நபர்கள் உள்ளே சிக்கியுள்ளனர் என தெரியவில்லை எனவும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரின் உதவி கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வந்த பின்னர் மீட்புப்பணிகள் தீவிரமடையும் எனவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
80 ஆண்டு பழமையான கட்டடத்தை பராமரிப்பு செய்ய சென்னை மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறவில்லை எனவும், கட்டட உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications