சென்னையில் திடீரென கொட்டி தீர்க்கும் கனமழை.. சூறைக்காற்றுடன் மோசமான வானிலை.. விமான பயணிகள் அவதி
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை முதல் வெயில் என்பது வெளுத்து வாங்கியது. ஆனால் மதிய வேளையில் பல இடங்களில் வானிலை முற்றிலுமாக மாறியது. கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான பெய்யும் வகையில் வானிலை மாறிய நிலையில் மாலை 4.30 மணி முதல் சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. கோடை வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மழை சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. இதற்கிடையே தான் திடீரென பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் என்பது கொளுத்தி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தான் இன்று முதல் கத்திரி வெயில் காலமும் தொடங்கியது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதிய வேளைகளில் வீடுகளில் ஏசி, பேன் இன்றி பொதுமக்களால் இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல. சென்னையிலும் வெயில் என்பது அதிகமாக தான் உள்ளது. இன்று காலையிலும் வழக்கம்போல் வெயில் என்பது அதிகரித்தது. ஆனால் மதிய வேளையில் வானிலை முற்றிலுமாக மாற தொடங்கியது. சென்னையின் பல இடங்களில் கருமேகங்கள் சூழ தொடங்கின. சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் மழைக்கான வாய்ப்பு உருவானது.
அதன்படி இன்று மாலை சுமார் 4.30 மணி முதல் சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை ஆயிரம் விளக்கம், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை பல்லாவரம், வண்டலூர், முடிச்சூர், சேலையூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
காலை முதல் வெயில் அதிகமாக இருந்த நிலையில் இந்த திடீர் மழை வெப்பத்தை தணிக்கும் வகையில் உள்ளதால் மக்கள் ஹேப்பியாகி உள்ளனர். சென்னையில் திடீரென்று மோசமான வானிலை காரணமாக விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கனமழை மற்றும் சூறைக்காற்று உள்ளிட்டவற்றால் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் வானில் வட்டமடித்தன. சிங்கப்பூர், மதுரை, கோவை, சூரத், திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்களால் உடனடியாக தரையிறங்க முடியவில்லை. மொத்தம் 11 விமானங்கள் பாதிக்கப்பட்டன. இந்த விமானங்கள் வானிலையே வட்டமடித்தன. இதில் சில விமானங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல் சென்னையில் இருந்து டெல்லி, சேலம், கொழும்பு, கவுகாத்தி, கோவை உள்பட பிற இடங்களுக்கு செல்ல வேண்டிய 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் விமான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications